மாலை மலர் 07.08.2012
போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா
சென்னை, ஆக. 7
சென்னை மற்றும் புறநகர் பகுதி மாநகராட்சி பள்ளிகளில் 8-வது வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு சமீபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 288 மாணவ-மாணவிகளும், புறநகர் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அனைவரும் 3 நாள் சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2062 சென்னை மாநகராட்சி செலவு செய்கிறது.
இந்த மாணவ-மாணவிகள் இன்று காலை பாரத் தர்ஷன் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை சென்னை மாநகர மேயர் சைதை. துரைசாமி மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.