தினமணி 08.08.2012
விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
பழனி, ஆக.7: பழனியில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு 976 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
பழனியில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 260 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிகளை பழனி சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு, பழனி ஒன்றியத் தலைவர் செல்லச்சாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பழனி கல்வி மாவட்ட அலுவலர் விஜயன், பழனி அதிமுக தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி தலைமையாசிரியர் திருமலைசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்துரை வழங்கினர். பழனி சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு பேசும்போது, தமிழக அரசு கல்வித்துறைக்காக 15 விலையில்லா திட்டங்களை அறிவித்து அவற்றை கல்வித்துறை மூலமாகவே சிறப்பாக அமல் செய்து வருகிறது. மடிக்கணினி திட்டத்துக்காக 14 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்துள்ளார் என்றார்.
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் 716 மடிக்கணினிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பழனிச்சாமி, அதிமுக சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் பாரூக், எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ்ராம், அரிமா சுந்தரம், தாராபுரம் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.