Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 மாதத்தில் அமைக்க திட்டம் ஏழுகிணறு பகுதியில் கழிவுநீரகற்று நிலையம்

Print PDF

தினகரன் 04.09.2010

6 மாதத்தில் அமைக்க திட்டம் ஏழுகிணறு பகுதியில் கழிவுநீரகற்று நிலையம்

சென்னை, செப்.4: "ஏழுகிணறு பகுதியில் கழிவுநீர் அகற்றுவதற்காக ரூ1.46 கோடி செலவில் புதிய கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது" என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

துறைமுகம் தொகுதி, 29வது வார்டிலுள்ள ஏழுகிணறு காவல் நிலையம் அருகில் கழிவுநீர் அகற்றுவதற்காக புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை மத்திய சென்னை எம்.பியும் மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் நேற்று பார்வையிட்டார். திட்ட பணிகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் விளக்கினர்.

பின்னர் தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பம்பிங் ஸ்டேஷன் அமைக்க ரூ26 லட்சம் மதிப்புள்ள 1,600 சதுர அடி நிலத்தை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. பம்பிங் ஸ்டேஷன் 6 அல்லது 7 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்.

இங்குள்ள 24, 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 38 தெருக்களுக்கு கழிவுநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். இதன் மூலம் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

இதையடுத்து அதே பகுதியில் செயின்ட் சேவியர் சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ரூ1.46 கோடி செலவில் புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ள இடத்தை இன்று பார்வையிட்டேன். இந்த பம்பிங் ஸ்டேஷன் மூலம் கழிவுநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். குடும்ப அட்டை கோரி சிலர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மேயர் மா.சுப்பிரமணியன் அழைத்து அந்த மனுக்களை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

குடிசை வீடுகளை அகற்றுவதால் தங்களுக்கு வீடுகள் கொடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் கொடுத்துள்ளனர். சாலையோரத்தில் உள்ள வீடுகளை அகற்றுகிறார்கள் என்று நீங்கள் அச்சம் அடைய தேவையில்லை. குடிசைகளே இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோரின் கனவாகும். அதற்காகவே முதல்வர் 25 ஆயிரம் கான்கிரீட் வீடுகளை கட்டி வருகிறார். அந்த வீடுகளில் உங்களை குடியமர்த்துவதுதான் முதல்வரின் திட்டமாகும். எனவே அந்த வீடுகளை நாங்களே திறந்து வைத்து உங்களை எல்லாம் குடியமர்த்துவோம். தன்னை நம்பியவர்களை முதல்வர் கைவிடமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முயற்சியால் மினி பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, இணை ஆணையர் ஆசிஷ் சாட்டர்ஜி வடசென்னை திமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டலக்குழு தலைவர் சண்முகசுந்தரம், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், கவுன்சிலர் எஸ்.புகழேந்தி, மாநகராட்சி, சென்னை குடிநீர்மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு மேளவாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.