Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 381 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 23.09.2010

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 381 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம்

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா

சென்னை, செப்.22: மீஞ்சூரில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரையில் 381.40 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

நெமிலியில் தயாராகி வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மிகவும் குறைந்த விலையில் ஆயிரம் லிட்டர் குடிநீர் 23-க்குப் பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னர் சென்னை கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் முதன்மை செயல் இயக்குநர் கணேசன் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் இளங்கோவன் மற்றும் செயல் பொறியாளர் அலாவுதீன் ஆகியோர் கூறியது:

கடலில் இருந்து 30 அடி ஆழத்தில் ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீர் உள்வாங்கும் தொட்டியில் நீர் எடுக்கப்படுகிறது. நீரில் வரும் சிப்பி, நத்தைக்கூடுகள் மற்றும் மீன் கழிவுகள், நவீன கருவி மூலம் வடிகட்டப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 400 கிலோ வாட் திறன் கொண்ட 3 மின் மோட்டார்கள் மூலம் கடல் நீர் உறிஞ்சப்படுகிறது. அதைத்தொடர்ந்து அழுத்தக் காற்றேற்றும் அறை மற்றும் மணல் வடிகட்டி என பல்வேறு நிலையங்களில் கடல் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இதையடுத்து, எதிர் சவ்வூடு பரவுதல் முறையில் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) கடல் நீரில் உள்ள உப்புத்தன்மை குறைக்கப்படுகிறது. உதாரணமாக 1 லிட்டர் கடல் நீரில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மில்லி கிராம் உப்புத்தன்மை இருக்கும். இது சவ்வூடு பரவுதல் முறையில், அதாவது 1 லிட்டர் கடல் நீரில் 500 மில்லி கிராம் என்ற அளவுக்கு உப்புத்தன்மை குறைக்கப்படும். அதைத்தொடர்ந்து கனிமப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, குடிநீராகப் பெறப்படுகிறது.

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீர் 48.66-க்கு வாங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவதாஸ் மீனா நிருபர்களிடம் கூறியது:

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து, கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் இதுவரையில் 381.40 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு பெறப்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து மணலி கீழ்நிலைத் தொட்டிக்கு நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சி மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

அதுபோல மாதவரத்தில் உள்ள கீழ்நிலைத் தொட்டிக்கு 3.50 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பட்டேல் நகர் குடிநீர் விநியோக நிலையம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, வட சென்னை மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

நெமிலியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் 2011 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். அதில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படும். இந்த நிலையத்திற்கான பணிகளுக்கு மத்திய அரசு 871.24 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிலையப் பணிகள் 700 கோடிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீர் 23-க்கு குறைந்த விலையில் வாங்கப்படும். இப்போது சென்னை நகரில் நாளொன்றுக்கு 66 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அயனாவரம், புளியந்தோப்பு பகுதிகளில் உள்ளவர்கள் கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை போடுவதால் கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். குடிநீர் கசிவு உள்ள 42 ஆயிரம் இணைப்புகளை சரி செய்ய உள்ளோம் என்றார்.

Last Updated on Thursday, 23 September 2010 11:13