தினமலர் 20.10.2010
எங்கு ரோடு போடறாங்க...? : இன்டர்நெட்டில் பார்க்கலாம்
சென்னை : "பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக நகரில் சாலைகள் சீரமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், சாலைகள் சீரமைக்கும் பணியை மேயர் சுப்ரமணியன், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது மேயர் கூறியதாவது: நகரில் பழுதடைந்துள்ள சாலைகள், சீர்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள் ளது. மிகவும் சேதமடைந்துள்ள 314 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு லட்சத்து 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சேதமடைந்துள்ள பகுதிகளை அகழ்ந்தெடுத்து, தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏறத்தாழ 11 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏழு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில், இரண்டு லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு, தார் சாலை அமைக்க 13 ஒப்பந்த தாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணி 10 நாட்களில் முடிக்கப்படும். சாலைகள் அமைக்கும் பணியை கண்காணிக்க, ஒவ்வொரு மண்டலத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மேற்பார்வை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகரில் எந்த சாலையில் எங்கு பணி நடக்கிறது என்ற விவரத்தை மாநகராட்சி இணையதளம் மூலம் வெளியிடும்.திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கல்லறை சாலை, எஸ்.என்., செட்டி தெரு, என்.எஸ்.சி., போஸ் சாலை, பிரகாசம் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, காந்தி இர்வின் சாலை, என்.எஸ்.கே., சாலை, வெங்கட்நாராயணா சாலை, சர்தார் படேல் சாலை, காந்திமண்டபம் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்., செட்டி சாலை போன்று 314 சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்திற்கு முன்பாக இந்த சாலைகள் சீரமைக்கும் பணி முடிக்கப்படும். கடந்த ஒரு வருடத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பில், உட்புற சாலைகள், போடப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளில், 2,349 சாலைகள், சிமென்ட் சாலைகளாக 590 கிலோ மீட்டர் நீளத்திற்கு 172 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.