Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

111ரோட்டோரத்தில் தூங்குவோர் தங்க நான்கு விடுதி : திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்               31.10.2010

111ரோட்டோரத்தில் தூங்குவோர் தங்க  நான்கு விடுதி : திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூரில் ரோட்டோரங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தூங்குபவர்கள், இரவில் தங்கிக்கொள்ள, மாநகராட்சி சார்பில் நான்கு இடங்களில் விடுதிகள் கட்டப்படுகின்றன.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், ரோட்டோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் நபர்கள் குறித்த ஆய்வு, கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 250 பேர் ரோட்டோர வாசிகளாக வாழ்வது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்களும், ஆதரவற்ற முதியவர்களும், உடல் ஊனமுற்றவர்களும், ரோட்டோரங்களில் வாழ்கின்றனர்.

இன்னும் சிலர், மனைவி, குழந்தைகள் என குடும்பங்களாக ரோட்டோரங்களில் சமைத்து, இரவுகளில் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். பகல் நேரங்களில் பிச்சை எடுப்பது, குப்பை காகிதங்கள் பொறுக்குவது போன்ற வேலை செய்யும் இவர்களுக்கு, தங்கிக்கொள்ள வீடுகள் இல்லை; கழிப்பிட வசதி இல்லை; சுகாதாரமான வாழ்க்கையும் இல்லை.

இவர்களது சுகாதாரமற்ற வாழ்க்கையால் மாநகரின் சுகாதாரம் கெடுகிறது; பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாப் பகுதிகள் மற்றும் வர்த்தக பகுதிகளில் இரவில் படுத்துக் கொள்ளும் இவர்கள், அப்பகுதிகளிலேயே சிறுநீர் கழித்தல், காலைக்கடன் கழித்தல், குளிப்பதில் ஈடுபடுகின்றனர். வீடு இல்லாமல், ரோட்டோரங்களில் வாழ்பவர்களுக்கு ஆதரவு தரும் வகையில், இரவில் அவர்கள் தங்கிக் கொள்ள வசதியாக, திருப்பூரில் நான்கு இடங்களில், வீடு இல்லாதோர் தங்கிக் கொள்ளும் விடுதிகள் கட்டப்படுகின்றன.

ஒரு விடுதிக்கு 15 பெண்கள், 15 ஆண்கள் என 30 பேர் தங்கிக் கொள்ளும் வகையில், கழிப்பிடம், குளியலறை வசதிகளுடன் இவ்விடுதிகள் கட்டப்படுகின்றன. பெண்கள், ஆண்களுக்கு என தனியிட வசதிகள், பொருட்களை வைத்துக் கொள்ள, அலமாரியுடன் இவ்விடுதிகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோரை கொண்ட குழு மூலம், இவ்விடுதிகளின் செயல்பாடு கண்காணிப்பில் இருக்கும். பராமரிப்பு செலவு குறித்து மத்திய அரசிடம் உதவி பெற மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி, கருவம்பாளையம் சாயப்பட்டறை பகுதி, புது பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை பின்புறம், பி.என்., ரோடு குமரன் பூங்கா எதிரில் என நான்கு இடங்களில், இவ்விடுதிகள் அமைக்கப்படுகின்றன. பிச்சைக்காரர்கள், உடல் ஊனமுற்றவர்கள், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள், முதியவர்கள் என பலரும், ரோட்டோரங்களிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் இரவில் படுத்து தூங்குகின்றனர்.

அவர்களது வாழ்க்கை சுகாதாரமானதாக இருப்பதில்லை. கழிப்பிடம், குளியலறை வசதிகளுடன், அவர்களுக்காக இந்த இரவு நேர தங்கும் விடுதிகள் அமைக்கப்படுகிறது. இதில், தங்கிக் கொள்ள தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவர்கள் மட்டுமே அவ்விடுதிகளில் தங்கிக் கொள்வர். அதற்காக மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இவ்விடுதிகளை பராமரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும். பகலில் அவர்கள் என்ன வேலையோ செய்து கொள்ளலாம். இரவில், இவ்விடுதிகளில் சென்று தங்கிக் கொள்ள வேண்டும். இதனால், பஸ் ஸ்டாண்டுகள், ரோட்டோரங்களில் படுத்து தூங்கும் மனிதர்களின் அவல நிலை மாறும். இவ்வாறு, கமிஷனர் ஜெயலட்சுமி கூறினார்.

Last Updated on Monday, 01 November 2010 07:37