தினமலர் 01.11.2010
நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கான இன்று ஈ-டெண்டர்
கடையநல்லூர்: தமிழகம் முழுவதும் நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கான சிறப்பு சாலை திட்டத்திற்கான ஆயிரம் கோடி ரூபாய் ஈ-டெண்டர் இன்று (1ம் தேதி) நடக்கிறது.தமிழகம் முழுவதும் சிறப்பு சாலை திட்டத்தின் மூலமாக பராமரிப்பு மற்றும் புணரமைப்பு பணிகள் சாலைகளில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தார்தளம், சிமென்ட் தளம் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ள கூறப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்.,களில் இப்பணிகள் மேற்கொள்ள தலா 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.மழையினால் பழுதடைந்த சாலை, குடிநீர் சீரமைப்பு பணியின்போது சேதமடைந்த சாலை, பாதாள சாக்கடை திட்டத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சீரற்ற சாலைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக அந்தந்த நகராட்சிகள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலை நகராட்சி நிர்வாக அதிகாரிகளும், டவுன் பஞ்., அதிகாரிகளும்
சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளும் தயாரிக்கப்பட்டு அதற்கான தகவல் அந்தந்த கவுன்சிலுக்கு தெரிவிக்கும்படி கூறப்பட்டது. இதனிடையில் ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு சாலை திட்டத்திற்கான ஈ-டெண்டர் இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. ஈ-டெண்டராக நடத்தப்படும் நிலையில் இந்த டெண்டரில் பங்கேற்கும் தகுதிவாய்ந்தவர்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு ஈ-டெண்டர் முடிவு பெறும் நிலையில் மாலை 4 மணிக்கு மேல் டெண்டர் குறித்த முடிவு வெளியாகும் என தெரிகிறது.இதனை தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறும் வகையில் மன்றத்தில் வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு டிசம்பர் 31ம் தேதி சிறப்பு சாலை முடிவு பெறும் வகையிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பணிகள் தரமாக நடத்திடவும், இதனை ஆய்வு செய்திட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த குழுவினர் சிறப்பு சாலை பணிகளை அந்தந்த நகராட்சி, டவுன் பஞ்., பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஈ-டெண்டர் தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்படுவதால் நகராட்சி, டவுன் பஞ்., வட்டாரங்களில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.