தினகரன் 10.09.2010
நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட மானிய வட்டியில் கடனுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
சிவகங்கை, நவ. 10: நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடன் பெற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழைகள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை, குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் ரூ.5,001 முதல் ரூ.10ஆயிரம் வரை உள்ள இருபிரிவினர் கடன் பெறலாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம், குறைந்த வருமான பிரிவினருக்கு ரூ.1.60 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடன் தொகைக்குரிய வட்டித்தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதரத்தில் நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவும், குறைந்த வருமானம் பிரிவினர் கட்டும் வீடுகள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும் இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்காக பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களும் கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மதுரை வீட்டு வசதி பிரிவின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் உரிய நேரத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.