தினமணி 30.11.2011
சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ளூர் கேபிள் டி.வி.க்கான டெண்டர்: அதிகபட்சத் தொகை ரூ.7.43 லட்சம்
சேலம், நவ. 29: சேலம் மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களை நடத்துவதற்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக ரூ.7.43 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாவட்டங்களில் கேபிள் டி.வி. நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளியில் மாவட்டத் தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, தாலுகா என 4 பிரிவுகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஒப்பந்தப் புள்ளியின் மூலம் பெறப்படும் அதிகபட்சத் தொகை ஏலத்தின்போது அடிப்படை நிர்ணயத் தொகையாக கருதப்படும் என்றும், விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டிகளில் போடலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சியர் க. மகரபூஷணம், வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் டெண்டர் பெட்டி திறக்கப்பட்டு, மனுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் 82 மனுக்கள் போடப்பட்டிருந்த நிலையில், 2 மனுக்கள் விசாரணை நிலையிலேயே நிராகரிக்கப்பட்டன. சுமார் 40 மனுக்கள் சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு மட்டுமே வந்திருந்தன.
இதைத் தொடர்ந்து, இரவு 9 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான டெண்டர் அதிகபட்சமாக, ரூ.7.43 லட்சத்துக்கு ஏலம் போனது.
நகராட்சி, தாலுகா அளவில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியவரின் மனுக்கள் நள்ளிரவு வரை பரிசீலிக்கப்பட்டது. இதில், டெண்டர் தாக்கல் செய்தவர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தையொட்டி, காலை முதலே ஆட்சியர் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.