தினமலர் 26.07.2012
ஈரோட்டில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மூன்று இடங்கள் பரிசீலனை
ஈரோடு: ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் புறநகர் பஸ் ஸ்டாண்டு அமைக்க, மூன்று இடங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.இந்தியளவில் நூல், ஜவுளி, மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு புகழ் பெற்றுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாகவும் ஈரோடு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. எப்போதும் கூட்ட நெரிசல் நிலவுகிறது.ஈரோடு நகரில் உள்ள மெயின் ரோடுகள் அனைத்தும், ஏராளமான குறுக்கு ரோடுகள் சந்திக்கின்றன.குறுக்கு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நெரிசல் ஏற்படும் ரோடுகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடியாத நிலை நிலவுகிறது.டவுன் பஸ்களும், வெளியூர் பஸ்களும் இந்த ரோடுகள் வழியாகவே செல்வதால், அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதில் சிக்கும் மக்கள், ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கணக்கில் காத்திருந்து, கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதிலிருந்து விடுபட ஈரோடு நகரின் மையத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்டை டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், புறநகர் செல்லும் பஸ்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சியின், 20 ஏக்கர் நிலம், பெரியசேமூர் அல்லது சூரியம்பாளையத்தில் பஸ் ஸ்டாண்டு அமைக்க ஆய்வு நடக்கிறது.சூரியம்பாளையம் அருகே ஆளும்கட்சியினர் நிறைய இடங்களை வாங்கி போட்டுள்ளதால், அங்குதான் பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றுவர் என்ற தகவல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தால் நிலங்கள் தாறுமாறாக விலையேறும். பெரியளவில் லாபம் பார்க்கலாம் என்ற அடிப்படையில் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.