தினமணி 26.07.2012
விருதுநகரில் சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் நகராட்சி சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அல்லம்பட்டி முக்கு சாலை ஆகிய இடங்களில் சைக்கிள் நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வேலைக்கு மற்றும் வெளியூர்களுக்குச் செல்வோர் என தினமும் 500 பேருக்கு மேல் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை நிறுத்தி விட்டுச் செல்கிறார்கள்.
இந்த சைக்கிள் நிறுத்துமிடங்கள் கடந்த ஆண்டு வரை ரூ.25 ஆயிரம் ஏலம் போனது. இதில், கூடுதலாக வருமானம் கிடைப்பதால் சைக்கிள் நிறுத்துமிடங்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியால் ரூ.3.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர்.
இது போன்ற காரணங்களைக் காட்டி முதலை எடுப்பதற்காக கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக வாகனம் நிறுத்துகிறவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இடவசதியில்லை: ஒப்பந்தம் பெற்றவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி வாகனங்களைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச் சுவர் இருக்க வேண்டும். மேலும், மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு சிமெண்ட் ஓடு அல்லது தகரக் கொட்டகை அமைத்திருக்க வேண்டும்.
ஆனால், கிடுகுகளால் வேய்ந்த இடங்களில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வருகிறது. அதுவும் பெரிய மழை, காற்று அடித்தால் தாங்காத அளவில் கொட்டகையின் அமைப்பு இருக்கிறது.
இதனால், வாகனங்கள் வெயில், மழைக்கு இடையே நிறுத்தப்பட்டுகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதியில்லாத நிலையில் பயணிகள் அமரும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற வருகிறவர்களுக்கு இடையூறாக இருப்பதால் சிரமப்பட்டு வருகிறார்கள்.
கூடுதல் வசூல்: 24 மணிநேரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3, சைக்கிள்களுக்கு ரூ.2 வசூல் செய்ய வேண்டும். ஆனால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.5 என கூடுதலாகவே வசூல் செய்து வருகிறார்கள். அதுவும் இங்கு விதிமுறை மீறி 12 மணிநேரத்திற்கு ஒரு முறை கூடுதலாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.
இது குறித்து நகராட்சித் தலைவர் ம.சாந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்வதாக நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.