தினமணி 14.06.2013
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிராக்கள்
கோவை மாநகராட்சிப் பகுதியில் திறக்கப்பட்ட அம்மா
உணவகங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்த மாநகராட்சி நிர்வாகம்
முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பூ மார்க்கெட், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட 10
இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களில் கூட்டம்
அலைமோதுகிறது. பல உணவகங்களில் சாப்பிட வருபவர்கள் தட்டு மற்றும்
டம்ளர்களைத் திருடிச் சென்றுவிடுகின்றனர்.
எனவை அம்மா உணவகங்களில் சாப்பிட வருபவர்களைக் கண்காணித்து பொருள்கள் திருடுப் போவதைத் தடுக்க கண்காணிப்பு காமிராக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவகத்திலும் தலா 2 காமிராக்கள் அமைக்கப்பட உள்ளன. உணவகத்திற்குள் ஒன்று, உணவகத்துக்கு வெளியில் ஒன்று என மொத்தம் 2 காமிராக்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.