தினமணி 03.10.2013
சென்னை பாடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை அம்பத்தூர் - பாடி சாலையில், பாடி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் சாலையின் இரு புறத்திலும் வரன்முறை மீறிக் கட்டப்பட்ட பாதைகள், நிழல் தடுப்புகள், படிகள், மாடிப் பகுதிகள் உள்ளிட்டவற்றை இயந்திரங்களைக் கொண்டு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதில், சில மோட்டார் ஷோரூம், கார் ஷோரூம் நிறுவனங்களும் அடங்கும். இதனால் அங்கே வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்ததுடன், ஜேபிசி இயந்திரங்களின் நடமாட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பதற்றம் ஏற்படாமல் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.