தினத்தந்தி 04.10.2013
தச்சநல்லூரில் மரக்கன்று நடும் விழா மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை மாநகர பகுதிகளை பசுமையாக்க மாநகராட்சி நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர். மேலும் அந்தந்த மண்டலங்களில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தச்சநல்லூர் 1–வது வார்டு செல்வ விக்னேஷ்நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் மரக்கன்று நட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சிமுத்து, மாடசாமி, நம்பி, புத்தநேரி செல்லப்பா, ஊர் தலைவர் சின்னத்தம்பி, நீமா ரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகி கே.டி.சி. சங்கர் செய்து இருந்தார்.