தினமணி 08.10.2013
போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ
போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் எரியும் தீயினால் இப்பகுதியில் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இதனை அணைக்க நகராட்சி அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
போடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு, போடி சிரைக்காடு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் குப்பைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. தீ மளமளவென பரவி, இரவு முதல் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து வந்த போடி நகராட்சி உதவி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் சுல்தான், சுகாதார மேற்பார்வையாளர் கருப்பணன் ஆகியோர் திங்கள்கிழமை இரவு வரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்று வருகின்றனர். இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
தீ கொழுந்துவிட்டு எரிவதால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சிரைக்காடு மலைவாழ் மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.