தினமணி 02.11.2013
தில்லி மாநகராட்சி இணையதளம்: மீண்டும் செயல்பட தொடங்கியது
கடந்த சில நாள்களாக செயல்படாமல் இருந்த தில்லி மாநகராட்சிகளின் இணையதளம் (www.mcdonline.gov.in) தில்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மீண்டும் செயல்பட தொடங்கியது.
இணையதளத்தைப் பராமரித்து வரும் டெக் மஹிந்திரா நிறுவனத்துக்கு மாநகராட்சிகள் அளிக்க வேண்டிய நிலுவை காரணமாக இணையதள செயல்பாட்டை அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.
இதை தொடர்ந்து மாநகராட்சி சேவைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி கோரிக்கை வைத்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்ற தில்லி உயர் நீதிமன்றம் இணையதள செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு டெக் மகேந்திரா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன், பாக்கி நிலுவை பிரச்னையில் இணக்கமான முடிவை எட்ட அறிவுறுத்தியது.
இந்தத் தகவல் தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.