Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரி மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், கோபி பஸ் நிலையத்தில் பூக்கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிசெட்டிபாளையம் உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரி உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்துக்கு சென்றனர். அங்கு, சிறிய பஸ் நிற்கும் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பூக்கடைகள், வெற்றிலைக் கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி சிலர் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அவர்களாகவே அகற்றினார்கள்.

இடமாற்றம்

அகற்றப்படாத சிலகடைகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும், சில கடைகளை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு நகராட்சி லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் மற்றும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் ஆகியவை சிறிய பஸ்கள் நிற்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

பஸ்நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை, நிற்கும் இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக் கூடாது. அவ்வாறு தடையை மீறி கடைகளை அமைத்தால் அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.