தினகரன் 20.12.2013
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் ரூ93 லட்சத்தில் வளர்ச்சித் திட்டம்
அனுப்பர்பாளையம்,: திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு கூட்டம் வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலாவது மண்டல உதவிஆணையாளர் முகமதுசபியுல்லா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மாரப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), உமாமகேசுவரி (திமுக), மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் விஜயக்குமார்,சுப்பிரமணியம், செந்தில்குமார், கல்பனா, சத்யா, சிதம்பரம், சந்திரசேகரன், அதிமுக கவுன்சிலர்கள் சின்னசாமி, சேகர், ஈசுவரன் செந்தில், பாலசுப்ரமணியம், விஜயகுமார் உள்ளிட்டவர்கள் பேசினர்.
தொடர்ந்து நகர்நல அலுவலர் ராமச்சந்திரன், உதவி ஆணையர் சபியுல்லா ஆகியோர் பேசினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காந்திநகரிலிருந்து குமார் நகர் வரை மேம்பாலம் கட்டுவதற்கான ஆக்கபூர்வ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலைகளை புதியதாக அமைக்கவும், செப்பனிடவும், ரூ.6 கோடியே 65 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. குடிநீரை பொறுத்த வரை முன் அனுமதி பெற்று உடனுக்குடன் தாமதமின்றி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வேலம்பாளையம் மண்டலக்கூட்டத்தில் ரூ. 93 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள் செய்வதற்காக 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்றார்.