தினமணி 22.01.2014
187 தெருநாய்களுக்கு கருத்தடை
நந்திவரம்- கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் தெருநாய்கள் அடுத்தடுத்து 7 பேரை கடித்த சம்பவத்தின் எதிரொலியாக 187 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் வள்ளி நகரில் பள்ளி மாணவி தனபிரியாவை (4), தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதைடுத்து நாய்கள் கருத்தடை மையம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நந்திவரம் கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.5 லட்சம் மதிப்பில் நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டது. இந்நிலையில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடந்த 9-ஆம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் மற்றும் சாலையில் நடத்துச் சென்றுக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 7 பேரை அங்கு சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த வெறிபிடித்த நாய் கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அதன் எதிரொலியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறியது: சென்னை வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பு மற்றும் மீஞ்சூரில் உள்ள ஹேண்ட் ஃபார் அனிமல் அமைப்புகள் உதவியுடன் பேரூராட்சி ஊழியர்கள் 187 தெருநாய்களை பிடித்தனர். பிடிபட்ட நாய்கள் நந்திவரம் கருத்தடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு அவைகளை தெருக்களில் மீண்டும் கொண்டுச் சென்று விட திட்டமிடப்பட்டுள்ளது. தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் நடவடிக்கை தீவிரமாக தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.