Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு "பாலியல் விழிப்புணர்வு' ஆலோசனை

Print PDF

தினமணி             25.01.2014 

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு "பாலியல் விழிப்புணர்வு' ஆலோசனை

வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஆலோசனை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த மாநகராட்சிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவிகளிடம் தவறான எண்ணத்துடன் தொட்டுப் பழகுவது, அவர்களைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவை தொடர்பாக புகார்கள் வெளியாகும் நிலையில், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு தில்லி மாநகராட்சி பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யோகேந்திர  சிங் மான் கூறியது: மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், "எது நல்ல தொடுகை, எது கெட்ட தொடுகை' என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டம் "பிளான் அண்ட் எஸ்ஏஆர்டி' போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும்.

இதற்கு உளவியலாளர்கள், நல ஆலோசகர்களை சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், ஆபத்தான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், உரிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இந்த நிதியாண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் பாதுகாவலர்களை நியமிக்கவும், கண்காணிப்புக் கேமராக்களை நிறுவுவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவுவதற்காக ரூ. 300 கோடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மூலம் இயக்கப்படும் பள்ளிகளில் நல்ல வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

வடக்கு தில்லி மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், காலணி உறைகள் ஆகியவை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 500 முன்மொழியப்பட்டுள்ளது. நர்சரி மாணவருக்கு அளிக்கப்படும் இதற்கான ரூ. 310 தொகையை ரூ. 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் நிலைக் குழுத் தலைவர் மோகன் பரத்வாஜ் பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.