தினமணி 30.01.2014
12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்
திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மத்திய பேருந்து நிலையம், திருவூடல் தெரு, தேரடி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. எனவே இதுபோன்று சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆணையாளர் பெ.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் மாலை வரை 12 மாடுகளை துப்புரவுப் பணியாளர்கள் பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்துள்ளனர். ஒவ்வொரு மாடுகளுக்கும் உரிய அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பிறகே அவை மாடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.