தினகரன் 31.01.2014
துறையூர் பேருந்து நிலைய நிழற்குடை ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு நகர்மன்ற கூட்டத்தில் முடிவு
துறையூர், : துறையூர் நகர்மன்ற கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் திவ்யா, பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:
பானுமதி: 2வது வார்டில் உள்ள வீடுகளிலும், பொதுக்குழாய்களிலும் காவிரி குடிநீர் பற்றாக்குறையாகவே உள்ளது. வசதி படைத்தவர்கள் மின்மோட்டார் வைத்து உறிஞ்சு விடுகின்றனர். பொதுமக்கள் என்னிடம் முறையிடுகின்றனர். இதை தீர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியா ளர் ரவிச்சந்திரன்: உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்.
நல்லதம்பி: பேருந்து நிலையம் நிழற்குடை சீரமைக்கும் பணிக்கு ரூ.20 லட்சம் ஐடிஎஸ்எம்டி திட்டத்தின்கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக மன்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. இந்த பணி எப்போது துவங்கி முடிக்கப்படும். தலைவர் முரளி: மன்ற அனுமதி பெற்றவுடன் உடனடியாக ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு பேருந்து நிலையம் என்பதால் விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
இதைதொடர்ந்து குடிநீர், சுகாதாரம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், விஜயசங்கர், கார்த்திகேயன், மகாராஜன் தங்கமணி, நல்லதம்பி, பானுமதி, செல்லமுத்து, கிருத்திகா, கோப்பெருந்தேவி, சுதா, மா.பாஸ்கர், க.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.