Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

Print PDF

 தினமணி       27.08.2014

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.61.50 கோடியில் 454 வகையான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று, திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.29.15 கோடியில் 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தைச் சீரமைக்கவும், திண்டுக்கல் மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் 26 எம்.எல்.டி., குடிநீரைப் பெறவும் ரூ.70.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு வகையான அடிப்படை வசதிகளை ரூ.82.34 கோடியில் ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான, போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், அந்த மாநகராட்சியில் ரூ.45.69 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாதாளச் சாக்கடைப் பணிகள், குடிநீர்ப் பணிகளால் சேதமடைந்த சாலைகள் ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

பாதசாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.1 கோடியில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சீரான, தரமான ஒளியை வழங்கும் நோக்கில் அங்கு ரூ.75 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.4.99 கோடியில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிகள்: திண்டுக்கல் மாநகராட்சிக்கும் ரூ.42.85 கோடிக்கு புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லை, தெருக்களில் ரூ.2.50 கோடியில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள், குறியீடுகள் அமைக்கப்படும். மேலும், ரூ.1.35 கோடியில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கென ரூ.5 கோடியில் புதிதாக அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும். மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி புதிய வசதிகள் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.17.50 கோடியில் 65 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படும்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல்லில் ரூ.10 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரூ.1.50 கோடியில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.