Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற தீவிரம்! இன்று முதல் சட்ட நடவடிக்கை பாயும்

Print PDF

 தினமலர்        28.11.2014

அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற தீவிரம்! இன்று முதல் சட்ட நடவடிக்கை பாயும்

கோவை : கோவை மாநகர எல்லைக்குள், அனுமதியின்றி தற்காலிமாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டிருக்கும், தனியார் வர்த்தக விளம்பரங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், கண்கவர் விளம்பரங்கள் வைக்க கோர்ட் தடை விதித்துள்ளது. அனுமதியின்றி விளம்பரங்கள் வைக்கப்படுவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.கோர்ட் உத்தரவுப்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக, கோவை விமான நிலைய ரோடு, காந்திபுரம் நஞ்சப்பா ரோடு ஆகிய இடங்களில், தனியார் இடங்களில் அனுமதியின்றி, இரும்பு சட்டங்கள் அமைத்து, நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த ஆறு விளம்பரங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அகற்றினர். அதன்பின், தற்காலிக மற்றும் நிரந்தர விளம்பரங்களை அகற்றுவதை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர்.

புதிய கமிஷனர் விஜய கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு, அனுமதியற்ற விளம்பர பலகைகளை இரண்டு நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கெடு நேற்றுடன் (27 ம் தேதி) நிறைவடைந்தது. கெடு முடிந்த பிறகும், அகற்றப்படாத விளம்பரங்கள், மாநகராட்சி பணியாளர்களால் அப்புறப்படுத்தப்படுவதுடன், அதற்கான செலவு தொகையும் வசூலிக்கப்படும். மேலும், அபராதம் விதிப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.வர்த்தக நிறுவனங்களும், விளம்பரம் அமைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும், விளம்பர நிறுவனங்களும், அனுமதியற்ற விளம்பரங்களை அகற்றிக்கொள்ள முன்வரவில்லை. அதனால், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில், ஐந்து மண்டலத்திலும், பிளக்ஸ் விளம்பரங்கள், இரும்பு சட்டம் அமைத்து வைக்கப்பட்ட நிரந்தர விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு மண்டலத்தில், ஒண்டிப்புதுார், ராமநாதபுரம், அவிநாசி ரோட்டில் விமான நிலைய சுற்றுப்பகுதிகள், வடக்கு மண்டலத்தில் சரவணம்பட்டி, கணபதி, அவிநாசி ரோடு பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம் பகுதிகளிலும், தெற்கு மண்டலத்தில் பாலக்காடு ரோடு, ஆத்துப்பாலம் பகுதிகளிலும் நேற்று விளம்பரங்களை அகற்றினர். நிரந்தர விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டங்களை 'காஸ் கட்டிங்' செய்து, அப்புறப்படுத்தினர். அப்போது, தனியார் விளம்பர நிறுவனத்தினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். 'கமிஷனர் உத்தரவுப்படி, அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று, கமிஷனரிடம் முறையிடுங்கள்; அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால், போலீசில் புகார் செய்வோம்' என, உதவி நகரமைப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின், தனியார் விளம்பர நிறுவனத்தினர் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ரயில்வே இடத்துக்கு விலக்கா?
மாநகரம் முழுவதும் விளம்பரம் அகற்றப்பட்டு, ரோடுகள் சுத்தம் செய்யப்பட்டாலும், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தினுள் நிரந்தரமாக அமைக்கப்பட்ட விளம்பரங்கள் ஒன்று கூட அகற்றப்படவில்லை. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், அவிநாசி ரோடு மேம்பாலம், கூட்ஸ்செட் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, வடகோவை மேம்பாலம் அருகில், ஏராளமான வர்த்தக விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதி பெற்றே, ரயில்வே ஸ்டேஷன் இடத்தில் விளம்பரம் வைக்க வேண்டும் என, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநகராட்சி அனுமதி பெறாமலே, ரயில்வே இடங்களில் விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன.

வரிவிதிப்பு மாறிவிடும்!
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''கடந்த மூன்று நாட்களில், நகரமைப்பு பிரிவு மூலம், ஐந்து மண்டலத்திலும் சேர்த்து, தற்காலிக மற்றும் நிரந்தர விளம்பரங்கள், 356 அகற்றப்பட்டுள்ளன. மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த, 812 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விளம்பரங்களை அகற்றிக்கொள்ள வழங்கப்பட்ட காலஅவகாசம் இன்று (நேற்று) நிறைவடைந்தது. நாளை (இன்று) 28ம் தேதி முதல், விளம்பரங்கள் அகற்றுவதற்கான செலவு வர்த்தக நிறுவனத்திடம் வசூலிக்கப்படும்; சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒரு வாரத்துக்குள் அனைத்து விளம்பரங்களும் அகற்றப்படும். கலெக்டர் அனுமதி பெற்று, குடியிருப்பு கட்டடங்கள் மீது நிரந்தர விளம்பரம் வைக்கப்பட்டிருந்தால், அந்த கட்டடத்துக்கு வர்த்தக அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படும்,'' என்றார்.