தினமணி 06.04.2010
வீட்டுமனைப் பட்டா: நகரப் பகுதி ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்
புதுச்சேரி, ஏப்.5: வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் வி. வைத்திலிங்கம் கூறினார்.
÷தனியார் இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் க. லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினார்.
÷அதற்கு பதிலளித்து முதல்வர் வி. வைத்திலிங்கம் பேசியது:
÷ புதுச்சேரி நில மானிய விதிகளின்படி நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா பெற தகுதி பெற்றவர்கள். தனியார் நிலங்களில் ஆக்கிரமிப்புச் செய்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்குத் தகுதி அடிப்படையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக ஒரு சட்ட முன் வரைவை அறிமுகம் செய்ய அரசு உத்தேசித்துள்ளது என்றார்.
÷அப்போது விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) குறுக்கிட்டு, இப்போதுள்ள சட்டத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
÷அவரைத் தொடர்ந்து ஆர். சிவா குறுக்கிட்டு, புதுச்சேரியில் இது போன்று தனியார் நிலங்களில் நிறைய பேர் வீடுகள் கட்டிக்கொண்டுள்ளனர். அந்த இடங்களை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றார்.
÷இதற்குப் பதில் அளித்த முதல்வர் வைத்திலிங்கம், இது போன்று பல்வேறு இடங்கள் இருக்கின்றன. மேலும் நகரத்தில் வசிக்கும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்படும் என்றார்.