Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

108 குழந்தைகள் மையங்களுக்கு ரூ. 2.67 கோடியில் சொந்த கட்டடங்கள்

Print PDF

தினமணி 20.02.2010

108 குழந்தைகள் மையங்களுக்கு ரூ. 2.67 கோடியில் சொந்த கட்டடங்கள்

தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 108 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.5 லட்சம் செலவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.. ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரச்செய்யும் வகையில் குழந்தைகள் வளர்ச்சி மையங்களை நவீனப்படுத்துவதோடு, அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் அவை இயங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 904 மையங்கள் சொந்த கட்டடங்களிலும், 605 மையங்கள் வாடகை கட்டங்களிலும் இயங்கி வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 108 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், கிராம உள்கட்டமைப்புத் திட்டம், சுனாமி மறுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 108 மையங்களுக்கும் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

64 குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்கள் ரூ. 36,79,500 செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 153 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட புதிய மையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி லெவிஞ்சிபுரம் 2-வது தெருவில் ரூ. 2.70 லட்சம் செலவில் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 12 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகளையும் அவர் வழங்கினார்.

அத்துடன் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன், நகர்நல அலுவலர் திருமால்சாமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துநாயகம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த. ஹரிராம், கூட்டுறவுச் சங்க தனி அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:50
 

மானிய வட்டியில் வீட்டு கடனுதவி பெற அழைப்பு

Print PDF

தினமலர் 20.02.2010

மானிய வட்டியில் வீட்டு கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் மானிய வட்டியில் வீட்டு கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீட்டு கடன் உதவித்திட்டத்தில் வீடு கட்டுவதற்கும், வீடு வாங்கவும் கடனுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன் பெற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூ 3,300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ 3,301 முதல் ரூ. 7,300 வரை பெறும் குறைந்த வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. ஒரு லட்சமும் , குறைந்த வருமான பிரிவினருக்கு ரூ 1.60லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை 15முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்ப செலுத்தப்படவேண்டும். மேற்காணும் கடன் தொகை தேசிய வங்கிகளின் மூலம் பெற்றுத்தரப்படும். கடன் தொகைக்கு வட்டியில் 5 சதவீதம் மானியமாக வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கவேண்டும். குறைந்த வருமான பிரிவினர்களுக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கவேண்டும்.தம்முடைய பெயரிலோ அல்லது தனது மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். சொந்தமாக நிலம்வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்றிருக்கவேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரம் அறிய திருச்சி காஜாமலை காலனியில் உள்ள வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Saturday, 20 February 2010 06:42
 

வீடு கட்ட மானிய வட்டியில் கடன் நகர்புற ஏழை மக்களுக்கு வாய்ப்பு

Print PDF

தினமலர் 20.02.2010

வீடு கட்ட மானிய வட்டியில் கடன் நகர்புற ஏழை மக்களுக்கு வாய்ப்பு

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவி திட்டத்தில் வீடு கட்டவோ, வாங்கவோ விண்ணப்பம் அளிக்கலாம். இத்திட்டத்தில் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் மூவாயிரத்து 300 ரூபாய் வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாதம் வருமானம் மூவாயிரத்து 301 முதல் ஏழாயிரத்து 300 ரூபாய் வரை பெறும் நடுத்தர ருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய், நடுத்தர வருமான பிரிவினருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும். கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திருப்பி செலுத்த வேண்டும். தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற்று தரப்படும். கடன் தொகைக்கு ஏற்பட வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். நடுத்தர வருமான பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். கடன் பெறுபவர் தன்னுடைய பெயரிலோ அல்லது மனைவியின் பெயரிலோ சொந்தமான வீடு இல்லாதவராக இருக்க வேண்டும். சொந்தமான நிலம் வைத்து இருப்பவர் அதற்குரிய பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். கடன் பெறுவதற்கு தேவையான விண்ணப்பம் திருச்சி வீட்டுவசதி பிரிவு அலுவலகம் அல்லது கரூர் சணப்பிரட்டி வடக்கு காந்திகிராமம் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பிரி வு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விபரங்களுக்கு திருச்சி செயற்பொறியாளர் 0431 - 242 0614, கரூர் இளநிலை பொறியாளர் 98943 54620 ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Saturday, 20 February 2010 06:34
 


Page 16 of 18