Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பசுமை கட்டடங்களை ஊக்குவிக்க சலுகை: டிடிஏ திட்டம்

Print PDF

  தினமணி      31.10.2014

பசுமை கட்டடங்களை ஊக்குவிக்க சலுகை: டிடிஏ திட்டம்

பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகள் வழங்க தில்லி மேம்பாட்டு நிறுவனம் (டிடிஏ) திட்டமிட்டு வருகிறது. இதற்கான வரைவு திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கில் தில்லி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலர் சஞ்சீவ் குமார் பங்கேற்று பேசியதாவது: "பசுமைக் கட்டடங்களில் குடியிருப்பவர்களுக்கு நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகள் வழங்க டிடிஏ திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த வரைவு திட்டம் மத்திய அரசு உருவாக்கி வரும் நவீன நகரங்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும்' என்று கூறினார்.

இந்தியா கிரீன் பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவர் பிரேம் சி ஜெயின் பேசுகையில், "பசுமைக் கட்டடங்களை கட்டுவோருக்கு கூடுதல் தளங்கள் அமைக்க அனுமதி அளிக்கலாம். இது நிதி அல்லாத சலுகைகளாகும்.

அதே நேரத்தில் இந்த வகையான கட்டடங்களுக்கு சொத்து வரி போன்ற வரிச் சலுகைகள் வழங்கலாம். இது நிதிச் சலுகைகளாகும் என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற புது தில்லி தொகுதி எம்.பி. மீனாட்சி லேகி பேசுகையில், "பசுமைக் கட்டடங்கள் அமைக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த விவகாரத்தில் டிடிஏவை தவிர பிற அரசுத் துறைகளும் உதவி செய்யும்.

அதேபோல் பெரிய கட்டடங்களில் சேரும் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் கிடைக்கும் எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்' என்று கூறினார்.

 

தில்லி மார்க்கெட்டுகளை மேம்படுத்த பெருநிறுவனங்களை நாடும் மாநகராட்சிகள்

Print PDF

 தினமணி

தில்லி மார்க்கெட்டுகளை மேம்படுத்த பெருநிறுவனங்களை நாடும் மாநகராட்சிகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி செüக் உள்பட பிரபல மார்க்கெட் பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பெருநிறுவனங்களிடம் தில்லி மாநகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய தில்லி, கரோல் பக், கம்லா மார்க்கெட், பஹர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுச் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடம் மாநகராட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

தங்களின் கீழ் வரும் பள்ளிகள், மருத்துவமனைகள், சமுதாய மையங்கள் ஆகியவற்றை பராமரிப்பதிலும் பெருநிறுவனங்களை பங்குகொள்ளச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போன்ற சமூகப் பணிகளில் பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தின் ஒரு பகுதியை பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

 

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை? மென்பொருள் மூலம் கணக்கெடுக்க புதிய திட்டம்

Print PDF

 தினமலர்        24.10.2014

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை? மென்பொருள் மூலம் கணக்கெடுக்க புதிய திட்டம்

சென்னை : புதிய அலைபேசி செயலி (அப்ளிகேஷன்) மூலம், சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை துல்லியமாக கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட உள்ளது.

துல்லியமாக...
சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கப்படுகின்றன. பொதுவாக புகார் வரும் பகுதிகள், ஊழியர்கள் நேரில் அடையாளம் காணும் பகுதிகள், தாழ்வான பகுதிகளாகவும், மழைநீர் தேங்கும் பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டு, அவை வரைபடமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் தேக்கம் உள்ள பகுதிகளை, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், புதிய மென்பொருள் மூலம் துல்லியமாக கணக்கெடுக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

கூகுளில் பார்க்கலாம் : இதற்காக ஓ.டி.கே., (ஓப்பன் டேட்டா கிட்) என்ற மென்பொருள், பொறியாளர்களின், 'ஸ்மார்ட்' அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது.இந்த மென்பொருள் மூலம் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்குவதை படம் பிடித்தால், புவியியல் ரீதியாக அந்த இடம், செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக பதிவாகும். இந்த படம், தலைமை அலுவலகத்தில் உள்ள பிரதான கணினியில் பதிவாகும். 'கூகுள்' வரைபடத்தில் தண்ணீர் தேக்கம் உள்ள பகுதி, சிவப்பு நிறத்தில் காட்டும்.

பொறியாளர்கள் படம் பிடிக்கும் பகுதிகள் மட்டுமில்லாமல், புகார் பிரிவில் பதிவாகும் இடங்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.தற்போது சிறப்பு திட்டங்கள் துறையில் உள்ள, 40 பொறியாளர்களின் அலைபேசியில் இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. விரைவில், 200 வார்டு பொறியாளர்களுக்கும் இந்த மென்பொருள் வழங்கப்பட உள்ளது.

சாலை சீரமைப்புக்கும் உதவும் : இதன் மூலம் இந்த வடகிழக்கு பருவமழைக்கு தண்ணீர் தேங்கும் பகுதிகளை துல்லியமாக கணக்கெடுத்து, அடுத்த மழைக்கு முன் அங்கு கட்டமைப்பு பணிகளை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த மென்பொருள் மூலம் மழைநீர் தேக்கம் மட்டுமல்லாமல், சாலை சீரமைப்பு, மாநகராட்சி சொத்துக்கள் என அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன.

 


Page 9 of 841