தினமணி 24.07.2009
வரன்முறைப்படுத்திய பகுதிகளில் வடிகால் கட்டும் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்
திருப்பூர், ஜூலை 23: திருப்பூர் மாநகராட்சியில் அண்மையில் வரன்முறைப்படுத்தப்பட்ட மனைப் பிரிவுகளில் ரூ.40 கோடியில் வடிகால் கட்டும் பணியை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரைமுறைக் கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 175 அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் உள்ள 19,929 மனைகளில் 18,601 மனைகள் வரன்முறைக் கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொண்டன.
இதையடுத்து, அப்குதிகளில் ரூ.40 கோடியில் மழைநீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவை நிதி நிறுவனத்தின் ரூ.26 கோடி கடன், ரூ.10 கோடி அரசு மானியம் மற்றும் ரூ.4 கோடி மாநகராட்சி பொதுநிதி மூலம் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
வடிகால் கட்டும் பணி 10 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் மூலம் 6 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் க.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. துணைமேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரன்முறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரூ.40 கோடியில் வடிகால் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் கோரி தீர்மானம் முன் வைக்கப்பட்டது. இதற்கு அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். இருப்பினும், ரூ.40 கோடி திட்டத்தை நிறைவேற்ற 18 மாதங்களே காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இப்பணிகள் செய்ய ஒப்பந்ததாரரை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம் சிறிய ஒப்பந்ததாரர்களும் பயன்பெற முடியும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.
வரன்முறைப்படுத்திய மனைப் பிரிவுகளில் வடிகால் கட்ட ரூ.26 கோடியும், புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட ரூ.4 கோடியும் கடனாக பெறப்பட்டுள்ளது. இக்கடன் தொகைகளை உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
அக்கடனை எளிதாக திருப்பி செலுத்த மக்களை பாதிக்காத வகையில் வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட வழிகளில் மாநகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி 52 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் ரூ.120 கோடி டூரிப் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றார் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் (அதிமுக).
இதற்கு பதிலளித்த மேயர் க.செல்வராஜ், டெண்டர் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளதால் ஒப்பந்ததாரர்களை அதிகரிக்க முடியாது. ஆனால் பணிகளை துரிதமாக முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.