Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி     09.09.2014

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 14 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், நகர்மன்றம், பேரூராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 97 பதவிகளுக்கு செப். 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றதையடுத்து அதிமுக வேட்பாளர் இ. புவனேஷ்வரி மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சங்கரன்கோவிலில் 4 மற்றும் 30 ஆவது வார்டு, புளியங்குடியில் 17 ஆவது வார்டு, கடையநல்லூரில் 24 ஆவது வார்டு, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு பத்தமடையில் 2 ஆவது வார்டு, ராயகிரியில் 2 ஆவது வார்டு, பணகுடியில் 3 ஆவது வார்டு, சுந்தரபாண்டியபுரத்தில் 13 ஆவது வார்டு, மூலக்கரைப்பட்டியில் 11 ஆவது வார்டு, நான்குனேரியில் 6 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை ஒன்றியம், மேலத்திடியூர் ஊராட்சித் தலைவர் கே. சங்கரகோமதி, சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சித் தலைவர் செ. குருநாதன் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் நடைபெறும் இடங்கள்: சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், தென்காசி நகராட்சி 14 ஆவது வார்டு, கடையநல்லூர் நகராட்சி 19 ஆவது வார்டு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 20 ஆவது வார்டு உறுப்பினர், திருக்குறுங்குடி பேரூராட்சி 3 ஆவது வார்டு, மேலகரத்தில் 5 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இம் மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 

கோவை மேயர் தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

Print PDF

தினமணி        01.09.2014

கோவை மேயர் தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் வெளியிட்டுள்ள செய்தி:

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி நடக்க உள்ளது.

தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டியிருந்தால், மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இதற்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0422 - 2302323 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

கோவை மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி சனிக்கிழமை நடந்தது.

மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளி, ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் உதவித் தேர்தல் அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.

வாக்கு எண்ணுமிடத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணுமிடத்தை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கோவை மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணப்படும் இடத்தையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையையும் ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 01 September 2014 07:39
 

எட்டுக்கு நான்கு! குளங்களுக்கு மாநகராட்சி 'மறுவாழ்வு'; ரூ.29.47 கோடியில் புனரமைக்க முடிவு

Print PDF

தினமலர்         26.08.2014  

எட்டுக்கு நான்கு! குளங்களுக்கு மாநகராட்சி 'மறுவாழ்வு'; ரூ.29.47 கோடியில் புனரமைக்க முடிவு 

கோவை : கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட எட்டு குளங்களில், முதல் கட்டமாக நான்கு குளங்களை, 29.47 கோடி ரூபாயில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர எல்லைக்குள், பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்த, நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன், செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் என, எட்டு குளங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.குளங்களில் இருக்கும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, முட்புதர்களை அகற்றி, குளத்தை துார்வாரி, கரையை பலப்படுத்தி, கழிவுநீரை சுத்திகரித்து தேக்கவும், மழைக்காலங்களில் மழை நீரை முழுமையாக குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கே, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குளங்கள், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்டு குத்தகையாக குளம் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதமும் செலுத்தப்படுகிறது. ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், மத்திய, மாநில அரசு மானியம் மற்றும் நிதியுதவி பெற்று குளங்களை புனரமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு நிதியுதவி கிடைக்காததால், குளங்கள் புனரமைப்பு திட்டம், ஐந்து ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.இந்நிலையில், கடந்த 2012 - 13ம் ஆண்டுக்கான பொதுப்பணித்துறை விலை அட்டவணைப்படி, குளம் புனரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தற்போது, 2013 - 14ம் ஆண்டு விலை அட்டவணைப்படி, 232 கோடி ரூபாய்க்கு திருத்திய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி பெறும் பொருட்டு, அரசு துறைகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்தாண்டு பொதுநல அமைப்புகள் முயற்சியால், பெரியகுளம் துார்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்தாண்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், தனியார் தொண்டு நிறுவனத்தினர் செல்வசிந்தாமணி குளத்தை துார்வாரும் முறையியில் ஈடுபட்டுள்ளனர். எந்த குளத்திலும், கழிவுநீரை சுத்திகரித்து தேக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், குறைந்த பரப்பிலுள்ள குளங்களை, துார்வாரி புனரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நரசம்பதி குளத்தை 9.95 கோடி ரூபாயிலும், கிருஷ்ணம்பதி குளத்தை 3.325 கோடியிலும், செல்வம்பதி குளத்தை 7.7 கோடியிலும், குமாரசாமி (முத்தண்ணன்) குளத்தை 8.5 கோடி ரூபாயிலும் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்ட கடனாக 60 சதவீதமும், மானியமாக 30 சதவீதமும் பெற்றும், மிதமுள்ள 10 சதவீத தொகையை மாநகராட்சி நிர்வாகம் மூலம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கடன் மற்றும் மானியம் பெற்று, முதல் கட்டமாக நான்கு குளங்களை துார்வாரி, கரையை பலப்படுத்தி, புனரமைக்க, அனுமதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே இரண்டு குளங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு குளங்களை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாலாங்குளம், சிங்காநல்லுார் குளங்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் துார்வார மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குறிச்சி குளத்தை கவனிக்கணும்!
மாமன்ற கூட்டத்தில் பேசிய தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, ''குறிச்சி குளத்தின் கரையை பலப்படுத்தி, நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க, மாநகராட்சி பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. குறிச்சி குளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். விளக்கமளித்த மாநகராட்சி செயற்பொறியாளர் நடராஜ், ''இந்த திட்டம் பற்றி பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Tuesday, 26 August 2014 09:51
 


Page 14 of 841