Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

Print PDF

தினமணி            21.09.2016 

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

  மத்திய அரசின் "பொலிவுறு நகரம்' திட்டத்தின் 3-ஆவது பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 4 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

2022-ஆம் ஆண்டுக்குள் 100 பொலிவுறு நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 நகரங்கள் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டன. அதில் சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 2-ஆவது கட்டமாக கடந்த மே மாதம் 13 நகரங்கள் அடங்கிய 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக நகரம் எதுவும் இடம் பெறவில்லை.

இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் 3-ஆவது பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியும் இதில் இடம் பிடித்துள்ளது. மேற்கு வங்கம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்கள் எதுவும் இப்பட்டியலில் இல்லை. அதே நேரத்தில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தாணே, நாசிக், நாகபுரி, கல்யாண் } டோம்பிவிலி, ஒளரங்காபாத் ஆகிய 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், உஜ்ஜைன், ராஜஸ்தானின் கோட்டா, அஜ்மீர், குஜராத்தின் வதோதரா, பஞ்சாபின் அமிருதசரஸ், லூதியானா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹுப்ளி-தார்வாட், மங்களூரு, சிவமுஹா, தும்கூரு ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சமாஜவாதி கட்சி ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் வாராணசி, ஆக்ரா, கான்பூர், பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஓடிஸாவில் தார்வாட், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, சிக்கிம் மாநிலத்தின் நாம்சி, நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களும் 3-ஆவது கட்ட பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 நகரங்களும் ரூ.66,883 கோடி செலவில் பொலிவுறு நகரங்களாக மேம்படுத்தப்படவுள்ளன.

"இதுவரை 60 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,44,742 செலவில் இவை மேம்படுத்தப்படும். பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்படும்' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பொலிவுறு நகரங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், இணையதள வசதி, மின்னணு நிர்வாகம் உள்பட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும்.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Print PDF

தி இந்து             20.09.2016

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம் பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப் பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆக்ரா, அஜ்மிர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், குவாலியர், ஹூப்ளி-தார்வாட், ஜலந்தர், கல்யான்-டோம்பிவலி, கான்பூர், கோஹிமா, கோடா, மதுரை, மங்களூரு, நாக்பூர், நம்சி, நாசிக், ரூர்கேலா, சேலம், ஷிமோகா, தானே, தஞ்சாவூர், திருப்பதி, துமகூரு, உஜ்ஜயினி, வடோதரா, வாரணாசி, வேலூர் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 3-வது பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் ஆகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, நாடு முழுவதும் 100 நகரங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நகரங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் மத்திய அரசு தலா ரூ.500 கோடியை வழங்கும். இதே அளவு தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஒதுக்கும். மீதம் உள்ள தொகை கடன் மற்றும் இதர வகையில் திரட்டப்படும்.

இதுவரை 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நகரங்கள் இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெறவில்லை.

 

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

Print PDF
தினமணி            22.01.2015

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சியால் ஏழ்மைநிலை குறைகிறது: உலக வங்கி

"நகரமயமாதலால், இந்தியாவில் ஏழ்மை நிலை குறைந்து வருகிறது' என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து "தெற்காசியாவில் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும் போக்கு' என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2004-2005 மற்றும் 2009-2010ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களில் 40 சதவீதம் பேர், வறுமை நிலையில் இருந்து முன்னேறியுள்ளனர்.

அதே காலகட்டத்தில், வறுமையிலும், மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருந்த மக்களில் குறிப்பிட்ட அளவினர், அதாவது இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில் இருந்த 11 சதவீதம் பேர், நடுத்தர வர்க்கத்தினராக உயர்ந்து விட்டனர்.

இருப்பினும், இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் அல்லது வறுமையில்லாத பிரிவைச் சேர்ந்த மக்களில் 14 சதவீதம் பேர், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2014ஆம் ஆண்டில், இந்தியாவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கையானது, வளர்ந்த நாடான அமெரிக்காவில் வறுமை நிலையில் இருந்து முன்னேறியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாகவே இருக்கும் எனத் தெரிகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மார்டின் ரமா தெரிவிக்கையில், "கடைக்கோடியில் இருப்பவர்களின் நாடாக இந்தியா இனிமேல் நீடிக்காது; சில பிரகாசமான அம்சங்கள் உள்ளன. இதுவொரு நல்ல செய்தியாகும்' என்றார்.

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஆன்-நோ ரூகுல் தெரிவிக்கையில், "நகரமயமாதலால், இந்தியாவில் வறுமை நிலை குறைந்து வருகிறது; வறுமை நிலையை அது அதிகரிக்கவில்லை' என்றார்.
 


Page 2 of 160