தினகரன் 25.01.2014
மெரினா அண்ணா நினைவிடம் அருகே இசை நீர்வீழ்ச்சியுடன் ரூ7.58 கோடியில் பூங்கா
சென்னை, : மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகம் அருகில் ரூ7.58 கோடியில் இசை நீர் வீழ்ச்சியுடன் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை புனரமைக்கும் பணிக்கு கூடுதலாக வெளிப்புற மற்றும் உள்வேலைகள் மற்றும் பணியிடம் அபிவிருத்தி செய்யும் பணிக்காக ரூ7.35 கோடி அனுமதிக்கப்படும்.
* சைதாப்பேட்டையில் உள்ள சலவையாளர் காலனியில் சலவைக்கூடம், உலர்த்தும் அறை, தேய்ப்புக்கூடம் மற்றும் ஓய்வறைகள்(பேஸ் 2) ரூ3.10 கோடியிலும், பேஸ் 3 ரூ3.10 கோடியிலும் கட்டப்படும்.
* சென்னை மெரினா காமராஜர் சாலையில் அண்ணா நினைவகம் அருகில் புதிய பூங்கா (சமப்படுத்துதல், சுற்று சுவர் கட்டுதல், செடிகள் அமைத்தல், மின்வசதி மற்றும் இசை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பணிகள்) ரூ7 கோடியே 58 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இசை நீர்வீழ்ச்சி பணிக்கு மட்டும் ரூ5 கோடி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.