Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

Print PDF

தினமலர்             17.08.2013

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்


கோவை:கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்' முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்' திட்டம் விரிவடையும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் 10 லட்சம் ரூபாயில், பரீட்சார்த்த முறையில் சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் குக்கர்' மூலம், மதிய உணவு தயாரிக்கவும், சத்துணவு கூடத்தில் சமையல் காஸ் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சூரிய சக்தியில் இயங்கும் வீட்டு உபயோக பொருட்கள் குறித்த கருத்தரங்கு கோவையில் நடந்தது. அதில், மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சூரிய சக்தி பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் குக்கர்' குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் விளக்கமளித்தன.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, "டியோராம் கொந்தர்' நிறுவனம் இரண்டு "சோலார் குக்கர்'களை, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறுவியுள்ளது. சத்துணவு பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக "சோலார் குக்கரில்' சமைக்கின்றனர்.

3 அடி நீளம், 6 அடி அகலத்திலுள்ள இரும்பு ஸ்டாண்டில், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில், அலுமினிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், குக்கர் வைப்பதற்காக இரும்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு தேவையானவற்றை குக்கரில் நிரப்பி, அதற்குரிய கம்பி வளையத்தில் வைக்கின்றனர்.வெயில் அதிகமாக இருந்தால், உடனடியாக சாப்பாடு அல்லது சாம்பார் தயாராகி விடுகிறது. வானிலை மந்தமாக இருந்தால், குக்கரில் உணவு வகை தயாராவதற்கு காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறது.

குக்கரில் அழுத்தம் ஏற்படும் போது, "விசில்' வருகிறது. அதன்பின், குக்கரை கீழே இறக்குகின்றனர், அழுத்தத்தை கண்காணிக்க குக்கரில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.பரீட்சார்த்த முறையில் "சோலார் குக்கர்' நிறுவப்பட்டுள்ளதால், மற்ற பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ""சோலார் குக்கர் திட்டத்திற்காக 10 லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டது. ""கோவையில் தட்பவெப்ப நிலைக்கு இத்திட்டம் கைகொடுக்குமா என்பதை ஆய்வு செய்ய, 1.35 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு சோலார் குக்கர்கள் வாங்கப்பட்டுள்ளது. ""பயனுள்ளதாக இருந்தால், ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரு "சோலார் குக்கர்' வாங்கப்படும். சோலார் குக்கர் பயன்பாட்டுக்கு வரும் போது, சமையல் காஸ் மற்றும் விறகு பயன்படுத்துவது குறையும்,'' என்றார்.

"கையாள மிகவும் எளிது' வடகோவை மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""சோலார் குக்கர் விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது; 35 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஏழு கிலோ அரிசியை சமைக்க முடியும். தற்போது, தினமும் 3 கிலோ அரிசி சமைக்கிறோம்; 50 முட்டையை வேக வைத்துள்ளோம்.

வெயில் இருக்கும் திசைக்கு செங்குத்தாக சோலார் குக்கரை வைக்க வேண்டும். வெறும் கண்ணால், சூரிய ஒளி பிரதிபலிப்பு தகடுகளை பார்க்கக் கூடாது; கருப்புக் கண்ணாடி அணிய வேண்டும். தூசு படிந்தால், சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த தகடுகளில் மரநிழல், கட்டட நிழல் படக்கூடாது என்று கூறியுள்ளனர். கையாள்வதற்கு எளிதாக உள்ளது,'' என்றார்.

 

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு 1500 இடங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               14.08.2013

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு 1500 இடங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 1500 இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

பசுமை கோவை

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்து அதில் பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

1500 இடங்களில் பூங்கா

கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசும்போது, கோவை மாநகராட்சி வார்டு பகுதிகளில் 277 பூங்காக்கள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1500 இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலசங்கத்தினர் சார்பில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்கப்படும். இதனால் பசுமை கோவையாக மாறும். இந்த பூங்காக்களை பொறுத்தவரை இடங்கள் தேர்வு செய்யப்படும்போது அதில் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சுவர், கம்பிவேலி, மின்விளக்கு, தண்ணீர் வசதிகள் செய்து தரப்படும்.

50 அமைப்புகள் விண்ணப்பம்

இதைத் தொடர்ந்து அதை பராமரிக்க அனுமதி பெறும் அமைப்பினர் அங்கு மரம், செடி வளர்த்தல், நடைபாதை அமைத்தல், விளையாட்டு திடல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிக்கப்படும் சிறந்த பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த பூங்காக்கள் அமைப்பதற்கு இதுவரை 50 அமைப்பினர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அனுமதி நிபந்தனை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விருதுநகர் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா

Print PDF

தினமணி               06.08.2013 

விருதுநகர் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா

விருதுநகர் நகராட்சியில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் உபயோகத்திற்காக மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் நகராட்சியின் 6-வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி பூங்கா தொடக்க விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்து பேசியதாவது: விருதுநகர் நகராட்சியில் 6-வது வார்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் எம்.எஸ்.பி. நாடார் பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து பொதுமக்களின் உபயோகத்திற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இப்பூங்காவில் பெரியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஹாலோ பிளாக் கற்கள் பதித்து நடைபாதை, மையப்பகுதியில் தியான மேடை அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் முன்பக்கத்தில் சுற்றுச்சுவர், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அமைதியான சூழ்நிலையில் உள்ள இப்பூங்காவை பொதுமக்கள் நன்கு பராமரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.

 மேலும், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், நகர் நல அமைப்புச் செயலாளர் மருத்துவர் ரத்தினவேல், வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.கே.எஸ்.பி.சங்கரபாண்டியன்,  நகராட்சி உறுப்பினர்கள் பேபி, சுந்தர், பழனிவேல்ராஜன், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

 


Page 16 of 135