Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்பு அவசியம்

Print PDF

தினமணி                28.06.2013

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்பு அவசியம்

நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும், என குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பிரித்தியா தேவி அப்பன் முன்னிலை வகித்தார். ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும், நிலத்தடி நீரை சேமிப்பது குறித்தும் அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்தது:

   நீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. மாவட்டத்தில், குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழே உள்ளது.

  எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தடுப்பணைகள், கசிவு நீர்க் குட்டைகள், ஊரணி மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

   மேலும், 2,500 பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, பொதுமக்களும் நீரின் தேவையை உணர்ந்து, அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். குறிப்பாக, மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும்.   

  மழை நீரைச் சேகரிக்கும் வகையில், மொட்டை மாடி, கசிவு நீர்க் குழிகள் முறை, துளையுள்ள கசிவு நீர்க் குழிகள் முறை, கசிவு நீர்ப் படுகை முறை, நீரூட்டல் கிணறு முறை (குறைந்த விட்டம், குறைந்த ஆழம், பெரிய விட்டம், அதிக ஆழம்) முறைகள் மூலம் மழைநீரை சேகரிக்கலாம் என, குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தெரிவித்தனர். 

  முன்னதாக, கிராம ஊராட்சிகளில் உள்ள நீர் செறிவூட்டுக் கட்டமைப்புகளின் பராமரிப்புக்கான தகவல் கையேட்டினை, ஆட்சியர் ந. வெங்கடாசலம் ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கினார்.

  கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மு.ச. பாண்டியராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் பி. மாரியப்பன்(திருச்சி மண்டலம்), துணை நிலநீர் வல்லுநர் ஆர். சீனிவாசன்,  நிர்வாகப் பொறியாளர் கோ. வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

2 பேரூராட்சி அலுவலகத்தில் தேவைக்கு கிடைத்தது சோலார் மின்சாரம் அதிகாரிகள் மகிழ்ச்சி

Print PDF

தினகரன்             27.06.2013

2 பேரூராட்சி அலுவலகத்தில் தேவைக்கு கிடைத்தது சோலார் மின்சாரம் அதிகாரிகள் மகிழ்ச்சி


வேலூர், :  பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகங்களில் சூரிய சக்தி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை சோதனை செய்து பார்த்தபோது அலுவலக தேவைகளுக்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் பேரூராட்சிகளில் அலுவலக தேவைகளுக்கான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெற சோலார் மின் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து தலா சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த 2 பேரூராட்சிகளிலும் தலா 3 கிலோவாட் (3,000 வாட்ஸ்) மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சோதனை முயற்சியாக மின் உற்பத்தி நடந்தது. இதில் அலுவலக பயன்பாட்டுக்கு தேவையான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பேரூராட்சி அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.60 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை மின் கட்டணத்துக்காக செலவிடப்படுகிறது. தற்போது சூரிய சக்தி மூலம் அலுவலக தேவைகளுக்கு மின்சாரம் கிடைப்பதால் மின் கட்டணத்துக்கு செலவு செய்துவந்த தொகை மிச்சமாகும்.

சோலார் வசதிக்கு செய்யப்பட்டுள்ள செலவுக்கு அரசிடம் இருந்து பேரூராட்சிகளுக்கு மானியம் கிடைக்கும். தற்போது நாட்ரம்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த அலுவலகங்களிலும் சோலார் வசதி செய்யப்பட உள்ளது.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் தன்னிறைவு திட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் 20 சூரியசக்தி தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

3,500 கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

Print PDF

தினமலர்             17.06.2013

3,500 கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 3,500 கட்டடங்களிலும், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.அனைத்து அரசு கட்டடங்களிலும், சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டடங்களிலும், மூன்று ஆண்டுகளில், சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்திருந்தது.தற்போது, இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

இதற்காக, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட, 3,500 கட்டடங்களில், முதல்கட்ட ஆய்வு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.இந்த திட்டம் குறித்து, மாநகராட்சி மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, மாநகராட்சியின் ஆறு கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், 15 மண்டலங்களிலும் சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தளபரப்பு அளவீடு, திட்ட மதிப்பீடு தயாரிப்பது, சாத்திய கூறுகளை ஆராய்வது போன்ற பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குள் சோலார் மின் உற்பத்தி திட்டம், 90 சதவீத மாநகராட்சி கட்டடங்களில் செயல்பாட்டில் இருக்கும்' என்றார்.

 


Page 19 of 135