தினமணி 03.02.2014
தரமற்ற இறைச்சி விற்பனை: 11 கடைகளுக்கு சீல்
சென்னையில் தரமற்ற இறைச்சி விற்ற 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:
சென்னை மாதவரம் மண்டலத்தில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது, இரட்டை ஏரியில் 3 கடைகள், மாதவரம் ரோஜா நகரில் ஒரு கடை, அடையாறு மண்டலம் இந்திரா நகர், சின்னமலை, வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டையில் 7 கடைகள் என மொத்தம் 11 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தக் கடைகளுக்கு சீல் வைத்து பூட்டப்பட்டன.
அக்கடைகளில் இருந்து இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் எலியட்ஸ் கடற்கரையில் ஆய்வு செய்தபோது, அங்கு உபயோகிக்க தகுதியற்ற எண்ணெய், புகையிலை போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 400 குடிநீர் பாக்கெட்டுகள், 50 குடிநீர் பாட்டில்கள், 5 லிட்டர் சமையல் எண்ணெய், 50 புகையிலை பாக்கெட்டுகள், 4 கிலோ 40 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.