Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி சர்வர் பழுதால் வரி வசூல் பாதிப்பு

Print PDF
தினமலர்           04.04.2013

மாநகராட்சி சர்வர் பழுதால் வரி வசூல் பாதிப்பு


சேலம்: சேலம் மாநகராட்சியில் வரிவசூல் கணிணி மயமாக்கப்பட்ட நிலையில், சர்வர் பழுதடைந்ததால், வரி வசூல் பணி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வரி வசூலாத நிலையில், ஊழியர்களுக்கான சம்பளம் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கம்ப்யூட்டர், "சர்வர்' மூலம் நான்கு மண்டல அலுவலகமும் இணைக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் தலா, 15 வார்டுகளை உள்ளடக்கி, மொத்தம், 60 வார்டுகளில் வீடு, கடை, மனைகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, குத்தகை ஏலம், தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு, மக்களுக்கான சாலை, சாக்கடை, கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வீடு, கடை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், மாதம் தோறும், 10 லட்சம் ரூபாய் அளவில் வரிவசூல் செய்யப்படுகிறது. வாகனங்கள் மூலமாகவும், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் வரி வசூலிக்கப்பட்ட மண்டல அலுவலகங்களில் உள்ள பணம் கட்டப்படுகிறது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால், அனைத்து வரவு, செலவு இனங்களும் கம்ப்யூட்டர் உதவியுடனே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், கம்ப்யூட்டர், "சர்வர்' பழுது அடைந்ததால், வரிவசூல் பணி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கம்ப்யூட்டர் பில்லிங் முறையில் வரிவசூல் ரசீது தரப்படுகிறது. சர்வர் பழுதால் வரி வசூலை நான்கு மண்டல அலுவலகங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வரி வசூல் பாதிப்பால் மாநகராட்சியில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இதுவரை சம்பளம் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், புதியதாக வீடு கட்டுபவர்கள், மின் இணைப்பு பெறுபவர்கள், மனை விற்பனை செய்பவர்கள் உள்ளிட்டோர் பட்டா கேட்டும், குடிநீர், மின் இணைப்பு கேட்டும், வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், வரி முழுவதுமாக கட்டப்பட்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும். இதுபோன்ற சூழ்நிலையில் கம்ப்யூட்டர் சர்வர் பழுதால், வரி வசூல் பணி பாதிப்புக்கு உள்ளாகி, பொதுமக்களும், ஊழியர்களும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்த மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியதாவது:

சென்னையில் இருந்து இப்பொழுது தான் வந்தேன். கம்ப்யூடர் சர்வர் பழுது குறித்து தகவல் தெரியவில்லை. இதுசம்பந்தமாக விசாரித்து பதில் அளிக்கிறேன் என்றார்.

மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட கமிஷனர், ""இன்று (நேற்று) காலை, 11 மணிக்கு தான் சர்வர் பழுதாகி உள்ளது. மூன்று நாட்களாக சர்வர் பழுது என்பது தவறான தகவல். சர்வருக்கு செல்லும் ஒயர் எரிந்து விட்டதால், பழுதாகியுள்ளது. விரைந்து பழுது நீக்கப்பட்டு விடும் என்றார்.
 

தொழில் வரியை வசூல் செய்ய மாநகராட்சி புதிய முயற்சி

Print PDF
தினமணி       04.04.2013

தொழில் வரியை வசூல் செய்ய மாநகராட்சி புதிய முயற்சி


தொழில் நிறுவனங்களிடம் இருந்து தொழில் வரியை வசூல் செய்ய சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி தொழில் வரி வசூல் செய்கிறது. இந்த வரி ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சிக்கும், நிறுவனத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகளை இந்த நிதியாண்டின் (2013-14) தொடக்கத்தில் இருந்தே வசூல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களின் பட்டியலை வருமான வரித் துறை, தொழிலாளர் நலத் துறை போன்றவற்றிடம் இருந்து பெற்று கடந்த ஆண்டு வரி செலுத்தியோர் பட்டியலுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது: சொத்து வரி மற்றும் தொழில் வரிகளை ஆண்டின் இறுதியில் மட்டும் தீவிரமாக வசூல் செய்யாமல் ஆண்டுத் தொடக்கத்திலேயே வசூல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வருமான வரித் துறையில் வரி செலுத்தியவர்கள், தொழிலாளர் நலத் துறை, கம்பெனி சட்டத்தில் பதிவு செய்தவர்கள் பட்டியல் போன்ற பட்டியல்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை தொழில் வரி செலுத்திய நிறுவனங்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு, வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இப்போது வங்கிகளில் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரி வசூலை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் மாநகராட்சி செயல்படும் என்றனர்.

கடந்த நிதியாண்டில் (2012-13) ரூ. 461.10 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரூ. 221.04 கோடி தொழில் வரியும், ரூ. 8.73 கோடி வர்த்தக உரிமத் தொகையும், ரூ. 56 லட்சம் கம்பெனி வரியும் சென்னை மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்டுள்ளது.
 

ரூ.352 கோடி குடிநீர், கழிவுநீர் வரி வசூல்

Print PDF
தினமணி                   04.04.2013

ரூ.352 கோடி குடிநீர், கழிவுநீர் வரி வசூல்


சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த நிதியாண்டில் (2012-13) ரூ.352.74 கோடி குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை 155 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி, அதன் பிறகு 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து  சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து கடந்த நிதியாண்டில் ரூ.9.5 கோடி குடிநீர் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2012-13 நிதியாண்டில் 87 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2011-12 நிதியாண்டைவிட ரூ.20.13 கோடி கூடுதலாகும். நடப்பு நிதியாண்டில் 100 சதவீதம் வரி வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது என்றனர்.
 


Page 15 of 148