Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

80 அடி ரோடு அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.11½ கோடி பற்றாக்குறை பட்ஜெட் பட்ஜெட்டை சமர்ப்பித்த மேயர் மல்லிகா பரமசிவம் அறிவிப்பு

Print PDF
தினத்தந்தி        27.03.2013

80 அடி ரோடு அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.11½ கோடி பற்றாக்குறை பட்ஜெட் பட்ஜெட்டை சமர்ப்பித்த மேயர் மல்லிகா பரமசிவம் அறிவிப்பு


ஈரோடு மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் மல்லிகா பரமசிவம் நேற்று சமர்ப்பித்தார். அதில் ரூ.11½ கோடி பற்றாக்குறை இருப்பதாகவும், 80 அடி சாலை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி பட்ஜெட்

ஈரோடு மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2013–2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை மேயர் மல்லிகா பரமசிவம் சமர்ப்பித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

புதிய வரிகள்

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2013–2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.160 கோடியே 94 லட்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டியது இருந்தாலும், அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் புதிய வரி ஏதும் இல்லாமல் இந்த வரவு –செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் இதுவரை வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களை கண்டறிந்தும் புதிதாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் வரிவிதிக்கப்பட்டு கூடுதலாக ரூ.81 லட்சத்து 12 ஆயிரம் வருமானம் ஈட்ட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் மாநகராட்சி கடைகள், சந்தைகள், கழிப்பிடங்கள் போன்றவற்றுக்கு ஏலம் விடுதல், கடைகளின் உரிமங்கள் புதுப்பித்தல் மூலம் ரூ.5 கோடியே 10 லட்சம் வருவாய் ஈட்டப்படும். மேலும் வருவாய் ஈட்டும் வகையில் அப்துல்கனி மார்க்கெட்டில் நவீன வணிக வளாக கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு அனுமதி பெற்று இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.

80 அடி ரோடு

மாநகராட்சி பகுதியில் வருவாய் நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் கல்வி நிதியில் இந்த ஆண்டு ரூ.85 கோடியே 23 லட்சம் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட உள்ளன. மாநகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பொருட்டு பிரப் ரோட்டினையும் சென்னிமலை ரோட்டினையும் இணைக்கும் 80 அடி திட்ட ரோட்டினை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் கூடுதலாக பஸ்நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ.400 கோடிக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.

அரசின் கொள்கை முடிவின் படி ஈரோடு மாநகரப்பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்க ரூ.66 லட்சம் செலவில் புதிய கழிப்பிடங்கள் கட்டவும், 27 பழைய கழிப்பிடங்கள் பராமரிப்பும் செய்யப்பட உள்ளன. பெரும்பள்ளம் ஓடை சுத்தம் செய்து, கான்கிரீட் தளம் அமைத்து பக்கச்சுவர் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

மேம்பாலம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள மாநகராட்சி மூலம் பரிந்துரைக்கப்படும். ரிங்ரோடு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் வகுப்பறைகள், புதிய கழிப்பிடங்கள் கட்டவும், பராமரிப்பு பணிகள் செய்யவும் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இடையன்காட்டு வலசு மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு ரூ.3½ லட்சம் செலவில் 10 கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். மாநகராட்சி அலுவலக கட்டிடங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் பெறும் வகையில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் திட்ட ஒப்புதல் அரசிடம் பெற்று பணிகள் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.90 லட்சம் அரசின் நிதி பெறப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மயானங்கள் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஆன்லைன் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் கூறினார்.

ரூ.11½ கோடி பற்றாக்குறை

மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பட்ஜெட்டில் வருவாய் நிதி, மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி ஆகிய மொத்த வருவாய் ரூ.160 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. திட்ட மதிப்பீட்டின்படி மொத்த செலவு ரூ.172 கோடியே 49 லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான பற்றாக்குறை நிதி ரூ.11 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரமாக உள்ளது. நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சைக்கிள் நிறுத்தங்கள், 4 சக்கர வாகன நிறுத்த இடங்களுக்கு தனி வரி நிர்ணயம் செய்தும், தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு குடிநீர் வினியோக கட்டணங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

புதிய வரி விதிப்பு ஏதும் இல்லாத பட்ஜெட் தஞ்சை நகராட்சி சேர்மன் "பெருமிதம்'

Print PDF
தினமலர்         26.03.2013

புதிய வரி விதிப்பு ஏதும் இல்லாத பட்ஜெட் தஞ்சை நகராட்சி சேர்மன் "பெருமிதம்'


தஞ்சாவூர்: ""தஞ்சை நகராட்சியில், புதிய வரிவிதிப்பு ஏதும் இல்லாத மக்களுக்கு சுமையற்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக இரண்டு பூங்காக்கள் 24 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் அழகுப்படுத்தப்படும்,'' என, நகராட்சி தலைவர் சாவித்திரி தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி கூட்டத்தில் 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை கமிஷனர் ரவிச்சந்திரன் வழங்க, தலைவர் சாவித்திரி பெற்றுக்கொண்டு பேசியதாவது:

நெற்களஞ்சியம் என, போற்றப்படும் தஞ்சை நகராட்சி கடந்த 1866ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1983ல் முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது. தஞ்சையில் ஆயிரம் ஆண்டுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோவில், அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை காண தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு உரிய அடிப்படை வசதி செய்து தரப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கில் கொண்டு 24 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்கா அழகுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குள் மரக்கூண்டுடன் கூடிய ஆயிரம் மரக்கன்று நடப்படும். வீட்டுவசதித்துறை அமைச்சர் பரிந்துரைப்படி, உள்ளூர் திட்ட குழுமம் திட்ட மேம்பாட்டு நிதியில், நான்கு கோடியே, 11 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வசதிக்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில், இரண்டு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ளப்படும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வெண்ணாற்றின் குறுக்கே குடிநீரேற்று ஆதாரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில், மொத்த நிதி வரவு, 136 கோடியே, 27 லட்சம் ரூபாயாகவும், செலவினம், 143 கோடியே, 60 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இதன்படி, மொத்த வருவாயில் நிகர பற்றாக்குறை, ஏழு கோடியே, 33 லட்சம் அதாவது, 5.36 சதவீதம் பற்றாக்குறை ஆக உள்ளது. இதை சமாளிக்க வருவாயை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளும், தேவையற்ற செலவை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய வரிவிதிப்பு ஏதுமின்றி, சுமையற்ற, பட்ஜெட் தயாரித்து, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

சன் ராமநாதன், தி.மு.க.,: தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட எலீசா நகர், அரசு மருத்துவமனை பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சீர்படுத்த வெண்ணாறு திட்டத்தில் குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் 24 மணிநேரமும் தண்ணீரை இறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் இறைப்பது போதவில்லை. இதை ஆறு மணி நேரமாக உயர்த்த வேண்டும்.

நகராட்சி தலைவர் சாவித்திரி: கணபதி நகர், எலீசா நகர் பகுதியில், குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் குடிநீரை இறைத்து, சேமிக்க 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்து தர மின்வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, மின்வினியோகம் கிடைத்தால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.

சுவாமிநாதன், அ.தி.மு.க.,: தஞ்சை அருகேயுள்ள டவுன் பஞ்.,ல் கூட பிளாஸ்டிக்கை ஒழித்து விட்டனர். ஆனால், நகராட்சி பகுதியில் ஒழிக்க முடியவில்லை. பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள தனியார் கிடங்கு பூட்டை உடைத்து பொருட்களை பறிமுதல் செய்ய, சட்டவிதிமுறைப்படி சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது வியாபாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் ரவிச்சந்திரன்: சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கலெக்டர், எஸ்.பி., கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோல இனி நேராமல் பார்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

கல்வி வளர்ச்சிக்கு 1.60 கோடி ரூபாய்: தஞ்சை நகராட்சியில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி பகுதியிலுள்ள பள்ளி கட்டிடங்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும் ஒரு கோடியும், தளவாட இணைப்பு, அலுவலக உபகரணம் வாங்க 14 லட்சம் ரூபாயும், புதிய கட்டிடம் கட் 30 லட்சம் ரூபாயும், மின்நிலை விளக்கு அமைக்க 16 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு சான்று இலவசம்: மேலும், சிறப்பு திட்டமாக நகராட்சி பகுதியில் 2012-13 ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த பிறப்பு, இறப்பு சான்று அலுவலர், சுகாதார ஆய்வாளர் மூலமாக இலவசமாக பிறப்பு சான்று வழங்கப்படும். இதன்படி இரண்டு சான்று நகல்கள் பெற 17 ரூபாய் செலுத்தாமல், வெறும் விண்ணப்பம் அளித்தாலே போதும்.

தமிழகத்தில் முதல்முறை அறிமுகம்

மின்சார செலவை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்கள், பஞ்.,களில், சோலார் மின்விளக்குகளை அதிகளவில் பொருத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்திலேயே, தஞ்சை நகராட்சியில் முதன்முறையாக, நகராட்சிக்கு உள்பட்ட 17 பள்ளிகளில் சோலார் மின் விளக்கு பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எட்டு துவக்கப்பள்ளி, ஆறு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி, இரண்டு மேல்நிலைப்பள்ளிகளில் சோலார் மின்விளக்கு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொருத்தப்படுகிறது. இதுதவிர, நகராட்சி பள்ளிகளிலுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
 

தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை

Print PDF
தினமணி         26.03.2013

தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை  


தஞ்சை நகராட்சியில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013 - 14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியது:

'நகராட்சி எல்லைக்கு உள்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும், எல்லா வித அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2013 - 14 ஆம் நிதியாண்டில் தரமான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, புதை சாக்கடை வசதி, குடிசைப் பகுதிகளில் மேம்பாட்டு வசதிகளை மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவை ரூ. 24.42 கோடி மதிப்பில் அழகுப்படுத்தப்படவுள்ளன.

நகராட்சியில் 2012, 2013 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த பகுதியில் இலவசமாகப் பிறப்பு சான்று வழங்கப்படும். இந்தப் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நகராட்சியின் வரி வசூல் திறனை மேம்படுத்திடும் வகையில் நகராட்சி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வர்களுக்கு கணினி, மடிக்கணினி வழங்கப்படும்.

மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அலுவலகக் கட்டடம், நகராட்சிப் பள்ளிகளில் சூரியஒளி மின்சாதன விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சி எல்லைக்குள் மரக்கூண்டுடன் 1,000 மரக்கன்றுகள் நடப்படும்.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் உள்ளூர் திட்டக் குழுமம், திட்ட மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.11 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ளத் திட்ட முன்மொழிவுகளைத் தயார் செய்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.18 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள திட்ட முன்மொழிவுகள் தயார் செய்து அனுப்பப்படவுள்ளது.

தஞ்சை நகரில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி பாதுகாக்ப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே குடிநீரேற்றும் ஆதாரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற நிதியாண்டில் நகராட்சியின் அனைத்து தலைப்புகளிலும் மொத்த நிதி வரவினம் ரூ. 136.27 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ. 143.60 கோடியாகவும் எதிர்பார்த்து வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 5.36 சதம் பற்றாக்குறை.

இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய ஒருங்கிணைந்த நிதி நிர்வாகத்தின் மூலம் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தப்படவுள்ளது. மேலும், நகராட்சி வருவாய் இனங்களில் ஏற்படும் இழப்பைத் தவிர்த்து, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் சாவித்திரி கோபால்.

நிகழ் நிதியாண்டில் வரவு ரூ. 86.54 கோடியாகவும், செலவு ரூ. 99.19 கோடியாகவும், பற்றாக்குறை ரூ. 12.65 கோடியாகவும் உள்ளது.
 


Page 8 of 31