Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Print PDF

தினகரன்           12.03.2013

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு


திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் 15 ஏக்கர் பரப்பளவில் வாட்டர் தீம் பார்க் அமைக்க உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2013-14ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் விபரம்:

திருச்சி மாநகராட்சி பகுதியில் 36,190 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மின்சேமிப்பு நடவடிக்கையாக இவற்றில் எல்இடி மின் விளக்குகளை பொருத்துவது, தெருவிளக்குகளை சீரமைப்பது போன்ற பணிகளுக்கு ரூ.28.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றியுள்ள மதிற்சுவர் பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் ரூ.50 கோடி செலவில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்பட உள்ளது. சிங்காரத்தோப்பு யானைக்குளம் பகுதியில் 4 அடுக்கு மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்ட உள்ளூர் திட்ட குழுமம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்னூர் அண்ணாநகரில் 2.65 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் வண்ண பூக்கள், நீரூற்றுகள், விளையாட்டு உபகரணங்கள், இருப்பு ஊர்தி, கேண்டீன் போன்றவற்றுடன் கூடிய அறிவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை அரசின் நிதியுதவி மூலம் பெற்று மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் நச்சுத்தொட்டிகளை சுத்தம் செய்ய ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு நவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாங்கப்பட உள்ளது.

திருச்சி மாநகரை திறந்தவெளியில் மனிதக்கழிவு இல்லாத மாநகரமாக மாற்ற ரூ.75 லட்சம் செலவில் 7 இடங்களில் புதிய கழிப்பறை கட்டவும், ரூ.1.25 கோடி மதிப்பில் 32 கழிப்பறைகளை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. புத்தூரில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே மீன் மார்க்கெட் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறும், சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த மீன் மார்க்கெட்டினை குழுமணி ரோட்டிலுள்ள காசி விளங்கி பாலம் அருகே நவீன வசதிகளுடன் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை பகுதியிலுள்ள சுடுகாட்டில் இறந்தவர்கள் உடல்கள் பழைய முறையில் எரியூட்டப்பட்டு வருகின்றது. அங்கு நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

மாநகரில் 60 சாலைகளில் அவற்றின் பெயரை சுட்டிக் காட்டும் வகையில் துருபிடிக்காத கட்டமைப்பினால் ஆன பலகை அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டிலுள்ள விடுபட்ட மொத்த வியாபாரிகளுக்கு, பழைய பேருந்து நிலையத்தின் வடபுறம் நிரந்தர கடைகள் கட்டித்தரப்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. உறையூர், மேலரண் சாலையில் செயல்படும் தாய் சேய் நல விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதனை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக ரத்த பரிசோதனைக்கூடம், மகப்பேறு அறுவை சிகிச்சை கூடம், ஸ்கேன் வசதி ஆகியவற்றுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான மருத்துவமனையை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட்டில் இயங்கி வரும் வாழைக்காய் மண்டி, வெல்லமண்டி, வெங்காயமண்டி மொத்த வியாபார கடைகளை மட்டும் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காந்தி மார்க்கெட்டில் உருவாகும் திடக்கழிவுகள், மக்கும் தன்மையுள்ள காய்கறி, மீன், இறைச்சி மற்றும் உணவு போன்ற கழிவுகளில் இருந்த பரிச்சார்த்த முறையில் தினசரி 5 மெட்ரிக் டன் கழிவுகளில் இருந்து பயோ-டைஜெஸ்டர் திட்டம் மூலம் மின்சக்தி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் 15 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தண்ணீர் விளையாட்டு பூங்கா (வாட்டர் தீம் பார்க்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சியில் தற்போதுள்ள 82 பூங்காக்களை புதுப்பித்து பராமரிக்கவும், புதிய பூங்காங்களை உருவாக்கவும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் எதிரிலுள்ள டைமண்ட் ஜூப்ளி வளாகத்தில் இருக்கும் கட்டண கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம், கடைகளை இடித்து விட்டு, புதிதாக நவீன கட்டண கழிப்பிடம், 2 மாடிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.

மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள், பிறப்பு இறப்பு பதிவேடு, நிர்வாக வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் போன்றவற்றை கணினியில் பதிவு செய்து, தேவைப்படும் நேரத்தில் உரிய விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் மின்னணு ஆளுமை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகம், வரி வசூல் மையங்கள், குப்பை கிடங்கு ஆகிய இடங்களில் நிர்வாக ரீதியாகவும், பாதுகாப்பு கருதியும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

5 புதிய வார்டுகளில் குடிநீர் அபிவிருத்தி

60 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த திருச்சி மாநகராட்சியுடன் கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக எல்லக்குடி, பாப்பாக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் மாநகராட்சி வார்டுககிளின் எண்ணிக்கை 65 ஆக உயர்த்தப்பட்டது. இதில், பாப்பாக்குறிச்சி பகுதியில் ஒரு நவீன ஆட்டிறைச்சி கூடமும், பாப்பாக்குறிச்சி பிரதான சாலையில் தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் தினசரி சந்தைக்கு (தரைக்கடை) நிரந்தரமாக கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 61-65 வார்டுகளில் தற்போது ஒரு நாளைக்கு, ஒரு நபருக்கு 80 லிட்டர் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை 135 லிட்டராக உயர்த்த ரூ.31.5 கோடி செலவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குடிநீர் சப்ளைக்காக ரூ.80 லட்சம் செலவில் லாரிகளும் வாங்கப்பட உள்ளன.

 

பட்ஜெட்: மாநகர மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...

Print PDF
தினகரன்           12.03.2013

பட்ஜெட்: மாநகர மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...


மாநகராட்சியின் வருவாயை உயர்த்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளாமல் இருப்பதால் திருச்சி மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக கடந்த 4 ஆண்டுகளை குறிப்பிடலாம். இனி வரும் காலங்களிலாவது வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆண்டு                   வரவு                        செலவு                 பற்றாக்குறை  

2010-11          ரூ.213.61 கோடி        ரூ. 235.61 கோடி        ரூ. 21.49 கோடி
2011-12          ரூ.210.15 கோடி        ரூ.228.24 கோடி         ரூ. 18.09 கோடி
2012-13          ரூ.276.04 கோடி        ரூ.287.46 கோடி         ரூ. 11.42 கோடி
2013-14          ரூ.260.38 கோடி        ரூ.278.74 கோடி         ரூ. 18.36 கோடி

திருச்சி மாநகராட்சியின் எல்கை விரிவடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் மாநகரின் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரிக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று மக்கள்  எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அம்சங்கள் இடம்பெறாத இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. முந்தைய பட்ஜெட்களில் அறிவித்து கிடப்பில் போடப்பட்டுள்ள பல திட்டங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டிலாவது அவற்றை செயல்படுத்தினால்தான் மக்களுக்கு ஆறுதலாக அமையும் என மாநகர ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 

ரூ.3,630 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Print PDF
தினமணி         12.03.2013

ரூ.3,630 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்


இந்த நிதியாண்டுக்கான (2013-14) சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ. 3 ஆயிரத்து 630 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட மாநகராட்சி வளர்ச்சிக்கான 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் புதிய திட்டங்களை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இந்த நிதியாண்டின் மொத்த வரவு ரூ. 3 ஆயிரத்து 629.40 கோடியாகவும், செலவு ரூ.3 ஆயிரத்து 630.50 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.10 கோடியாகவும் இருக்கும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 922 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.708 கோடி அதிக செலவினங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, பொது சுகாதாரம், குடும்ப நலம், சாலைகள், பாலங்கள், வருவாய், திடக்கழிவு மேலாண்மை, கட்டடம், மின்சாரம், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொத்து வரி, தொழில் வரி உள்பட புதிய வரிவிதிப்புகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

வார்டு அலுவலகங்களில் சொத்து வரி: மாநகராட்சி சொத்துவரி தற்போது மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வார்டு அலுவலகங்களில் வரி செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 200 வார்டு அலுவலகங்களில் கணினி வசதியுடன்கூடிய சொத்துவரி வசூல் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஜெனரேட்டர்: மாநகராட்சிப் பள்ளிகளில் மின்தடை காரணமாக கணினி வகுப்புகள், ஆய்வகங்கள், அலுவலகப் பணிகள் தடைபடாமலிருக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் நிறுவப்பட உள்ளது.

சென்னையில் தற்போது 99 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே அதற்கு கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு மேலும் 20 தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையில் ஒன்றாம் வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொசுவை ஒழிக்க நொச்சி செடி வளர்ப்பு: கொசு மற்றும் பூச்சிகளைக் குறைக்கும் வகையில் வீடுகள்தோறும் நொச்சி செடி வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொச்சி செடியில் உள்ள ரசாயன மூலப்பொருள்கள் மூலம் கொசு உள்பட தீங்கு விளைவிக்கும் அனைத்து புழு பூச்சிகளை ஒழிக்க முடியும் எனவும் இதற்காக வீடுகள் மற்றும் நீர்நிலை ஓரங்களில் அந்தச் செடியை வளர்ப்பதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேத மருந்தகங்கள்: இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தகங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் தொடங்கப்பட உள்ளன. ஏழை மக்கள் பயன் பெற வேண்டி 11 சித்தா மருந்தகங்கள், 14 ஆயுர்வேத மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நல்வாழ்வு மையங்கள்:  சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 10 நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தேவையான இடங்களில் இந்த நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பூங்காக்கள்: மாநகராட்சி பகுதியில் உள்ள திறந்த வெளிநிலங்களில 100 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நூற்றாண்டு நிறைவு விழா அரங்கம்: சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தின் நூற்றாண்டு விழா (1913-2013) நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய பல்நோக்கு அரங்கம் கட்டப்படும்.

பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் 15 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆய்வகங்களில் ஆங்கில உச்சரிப்பு, பேச்சு, எழுதும் திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதே போல போதிய இடவசதி உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்கப்படும்.

மழலையர் பள்ளிகளில் வண்ண சீருடை: சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல வண்ண சீருடைகளும், குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளும் வழங்கப்படும். மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் மேலும் 10 புதிய மழலையர் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாய்கள் சரணாலயம்: தெருக்களில் நோய்களுடன் திரியும் நாய்களைப் பராமரிப்பதற்காக மண்டலம் தோறும் நாய்கள் சரணாலயம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு தொல்லையளிக்கும் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும். மேலும் நாய்களுக்கு இனக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து சரணாலயத்தில் பராமரிக்கப்படும்.

செல்லப் பிராணிகள் மயானம்: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்தால் அவற்றை அடக்கம் செய்வதற்காக மண்டலம் தோறும் செல்லப் பிராணிகள் மயானம் அமைக்கப்படும். இங்கு பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை இலவசமாக அடக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தி மின்சாரம்: மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி அலுவலகங்களின் அனைத்துக் கட்டடங்களிலும் சூரிய சக்தி தகடுகள் மூன்றாண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, செலவீனம் எவ்வளவு?

சாலைகள் மற்றும் பூங்கா ரூ. 990.49 கோடி

மழைநீர் வடிகால்வாய் ரூ. 450 கோடி

பாலங்கள்           ரூ. 31.15 கோடி

மின்சாரம்           ரூ. 66 கோடி

திடக்கழிவு மேலாண்மை ரூ. 58.70 கோடி

இயந்திரப் பொறியியல் ரூ. 14.10 கோடி

கட்டடம்             ரூ. 74 கோடி

கல்வி                  ரூ.14.50 கோடி

சுகாதாரம்           ரூ.   3.08 கோடி

குடும்ப நலம்        ரூ.   3.30 கோடி
 


Page 10 of 31