Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் பற்றாக்குறை ரூ.61 லட்சம்

Print PDF

தினமணி 01.04.2010

வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் பற்றாக்குறை ரூ.61 லட்சம்

வேலூர், மார்ச் 31: வேலூர் மாநகராட்சியில் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. புதிய பட்ஜெட்டில் ரூ.61 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ப.கார்த்திகேயன் தலைமை வகித்து, நடப்பாண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள், நலிவடைந்தோர் என அனைத்து தரப்பு மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

2010-2011ம் ஆண்டில் மொத்த மூலதன வரவு ரூ.72.03 கோடி. மூலதனச் செலவு ரூ.72.64 கோடி. நிகர பற்றாக்குறை ரூ.61 லட்சம்.

மாநகராட்சி பகுதியில் விடுபட்ட தொழில்துறையினரைக் கண்டறிந்து, தொழில் வரி விதிப்பதன் மூலமும், புதிதாக வரன்முறைப்படுத்தப்பட்ட மனைப்பிரிவுகளில் காலிமனைகளுக்கு வரிவிதிப்பதன் மூலமும், அரசின் கூடுதல் நிதியுதவி மூலமும் இந்த பற்றாக்குறை நிதி சரி செய்யப்படும்.

கடந்த 2009-2010ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், வேலூர் மாநகராட்சியில் வருவாய் இனங்களும், செலவினங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ரூ.28.33 கோடியாக இருந்த மொத்த வருவாய், இந்த ஆண்டு ரூ.72.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, கடந்த ஆண்டு ரூ.24.29 கோடியாக இருந்த செலவினங்கள், ரூ.72.64 கோடியாக அதிகரித்திருக்கிறது.

புதைசாக்கடைக்கு பெரும்பங்கு செலவு

மாநகராட்சி வருவாய் ரூ.72.64 கோடியில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.30 கோடி செலவிடப்படுகிறது. இத்திட்டம் ரூ.55 கோடியில் தயாரிக்கப்பட்டு, முதல்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.8.93 கோடி. எனவே, மாநகராட்சியின் வளர்ச்சி கருதி, பொதுமக்கள் தாங்களாக முன்வந்து இந்த பங்களிப்புத் தொகையை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஆரம்பக்கல்விக்காக ரூ.55 லட்சம், சாலைகள், தெருவிளக்குகள், பாலங்கள், வடிகால்கள், கட்டடங்கள், மருத்துவமனைகளுக்காக ரூ.12.17 கோடி செலவிடப்படுகிறது.

சொத்துவரி, தொழில்வரி

2010-2011ம் ஆண்டில் சொத்துவரி ரூ.80 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துவரி வசூலைத் தீவிரப்படுத்த மாநகராட்சி சார்பில் நகரில் 4 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களிலும் இங்கு வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது.

நகரில் விடுபட்ட 1,200 இடங்களுக்கு தொழில்வரி விதிக்கப்படும். திருந்திய தொழில் வரி விகிதம் மற்றும் கூடுதல் வரி விதிப்புகள் மூலம் கூடுதலாக ரூ.18 லட்சம் வருவாய் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க..:

வறட்சி காலத்தில் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்க, புதிய கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க ரூ.1.20 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ரூ.55 லட்சத்தில் 50 மின்விசை பம்புகளுடன் கூடிய ஆழ்குழாய்க் கிணறுகள், ரூ.20 லட்சத்தில் 4 கி.மீ. தூரத்துக்கு பகிர்மான குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள் மேம்பாடு

நகர பேருந்து நிலையத்தை ரூ.40 லட்சத்தில் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கான இருக்கைகள், மின்சார வசதிகள், உயர்மின் கோபுரங்கள், தரைகள், சுவர்களுக்கு டைல்ஸ் பொருத்துதல், நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும்.

புறநகர்ப் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி, அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து நிலையமாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அரசின் நிதியுதவி பெற்று வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என புதிய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 10:23
 

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.11.12 கோடிக்கு பட்ஜெட் : உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம்

Print PDF

தினமலர் 01.04.2010

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.11.12 கோடிக்கு பட்ஜெட் : உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் சுமார் 11.12 கோடி ரூபாய் வரும் நிதியாண்டின் வரவு செலவு பட்ஜெட் தொகையாக உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கோவில்பட்டி நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். துணை சேர்மன் சந்திரமவுலி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சேர்மன் மல்லிகா கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது வரும் நிதியாண்டில் கோவில்பட்டி நகராட்சியின் வரவு செலவு பட்ஜெட் தொகையாக உத்தேச திட்ட மதிப்பீடு குறித்து தெரிவித்தார்.

இதில் வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொகையாக வருவாய் மற்றும் மூலதன நிதி வகையில் வரவாக 8 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், செலவு அதே அளவிற்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதி வகையில் வரவாக 2 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும், செலவு அதே அளவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் வரும் நிதியாண்டில் கோவில்பட்டி நகராட்சி பட்ஜெட் தொகையாக ரூ.11 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடந்தது. இதில் வழக்கம்போல் பல கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் துவங்கிய பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், குடிநீர் விநியோகம் சீராக இல்லையென்றும், வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை என்றும், தெருவிளக்கு எரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். முக்கியமாக கவுன்சிலர் தவமணி நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க தீர்மானம் நிறைவேற்றி சுமார் இரண்டாண்டுகள் ஆகியும் வாங்கவில்லை என்றதற்கு, உடனடியாக ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் தெரிவித்தார். அதிமுக கவுன்சிலர் ராமர் கோவில்பட்டி நகராட்சி இரண்டாவது பைப்லைன் திட்டம் குறித்து பேசும்போது, வெளியே இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு பல கட்சியினர் நன்றி தெரிவித்து இருப்பதால், திட்டம் உண்டா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இரண்டாவது பைப்லைன் திட்டம் ஏற்கனவே வந்த கடிதத்தின் படி இல்லையென்றாகி விட்ட நிலையில், அதை நிறைவேற்ற லோனுக்காக முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் கவுன்சிலர் கனகராஜ் வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சமுதாய நலக்கூடத்திற்கு கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு பொது நிகழ்ச்சிக்கும், இலவச கலர்டிவி வைப்பதற்கும் கட்டணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் சேர்மன் தெரிவித்தார். தவிர கவுன்சிலர் ராஜகுரு பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ரோடுகளில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்துவது குறித்தும், கவுன்சிலர் தமிழரசன் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வழங்குவது மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர் பற்றாக்குறையை நீக்குவது குறித்தும், கவுன்சிலர் கருணாநிதி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வருவது குறித்தும் கேள்வி எழுப்பிய போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் சேர்மன் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி பொறியாளரும், (பொறுப்பு) ஆணையாளருமான செய்யது அகமது, நகர அமைப்பு அலுவலர் சேதுராஜன், வருவாய் அலுவலர் சிவராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:42
 

மாநகராட்சி பட்ஜெட் துளிகள்...

Print PDF

தினமணி 26.03.2010

மாநகராட்சி பட்ஜெட் துளிகள்...

சேலம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் பஸ்கள் வந்து செல்லும் நேரம் மற்றும் வழித்தடம் குறித்து தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும்.

புதிய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்க வசதியாக தலா ரூ.25 லட்சம் செலவில் உயர் நிலை நடைபாதை அமைக்கப்படும்.

நேரு கலையரங்கம் ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வசதிகளுடன் நவீனப்படுத்தப்படும். மாநகராட்சியில் செயல்படும் நகர் நல மையங்கள், மருந்தகங்கள், தாய் சேய் நல விடுதிகளுக்கு மருந்துகள் வாங்க, இரும்பு பீரோ மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்படும். மருத்துவ முகாம்களுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை கொண்டு செல்வதற்காக ரூ.10 லட்சம் செலவில் புதிய வாகனம் வாங்கப்படும்.

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு கூடுதல் அறைகள் கட்டுதல், மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், பிரசவ அறைகளுக்கு சலவைக் கல் பதித்தல் போன்ற பணிகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புகார் பெட்டி

குப்பைகளை சேகரிக்கும் டம்பர் தொட்டிகள் 40-ம், நவீன காம்பாக்டர் எந்திரம் வாங்கவும் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு சான்று வழங்கும் மண்டல அலுவலகங்களுக்கு 10 கம்ப்யூட்டர், பிரிண்டர் வாங்க ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் மண்டல அலுவலகங்களில் புகார் பெட்டி வைக்கப்படும். நெரிசலைக் குறைக்கும் வகையில் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றப்படும். நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு நூலகம் அமைக்கப்படும். மாநகராட்சியின் நான்கு மண்டல எல்லைகளிலும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படும். பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி ரயில் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பிரி-பெய்டு ஆட்டோ ஏற்படுத்தப்படும்.

தனியார் பூங்கா

மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள், பூங்காக்கள், சமுதாய நலக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை கட்ட முன் வரும் தனியாருக்கு மாநகராட்சி உதவி செய்யும். தனியார் சொந்த நிதியில் கட்டிக் கொடுத்து பராமரிக்கும் அந்த கட்டுமானங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மாநகராட்சி வசம் வரும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

Last Updated on Friday, 26 March 2010 06:45
 


Page 20 of 31