Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

Print PDF

  தினமலர்          30.10.2014

மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

திருப்பூர் : தமிழகத்தில், முதன்முறையாக, தெருவிளக்கு மின்சாரம், பராமரிப்பு செலவினத்தை மிச்சப்படுத்தும் புதிய திட்டம், தனியார் நிறுவன பங்களிப்புடன் திருப்பூர் மாநகராட்சியில் அமல்படுத்தப் பட உள்ளது. இதன் மூலம் மூன்று கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், அதிக மின் செலவு ஏற்படும் 40 வாட்ஸ் டியூப் லைட்கள் 15,448 உள்ளன. 250 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 666; 150 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 57; 250 வாட்ஸ் மெட்டல் அலாய் விளக்குகள் 1,794 மற்றும் மெர்குரி விளக்குகள் உட்பட 24,575 தெருவிளக்குகள் உள்ளன. மேலும், 280 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி தெருவிளக்குகளுக்கு மின் கட்டணமாக மாதம் 35 லட்சம் ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு 4.20 கோடி; தெருவிளக்கு பராமரிப்புக்கு 1.80 கோடி என ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவாகிறது. தெரு விளக்கு பராமரிப்பு பணி, மின்சாரம் சேமிப்பு, புதிய மின் விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு, ஒருங்கிணைந்த நகர்ப்புறவளர்ச்சி திட்டத்தின் கீழ் 28.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 40 வாட்ஸ் டியூப் லைட்களுக்கு பதிலாக 15 வாட்ஸ் எல்.இ.டி., பல்பு பொருத்தப்படும்; விடுபட்ட பகுதிகளில் புதிதாக 5,800 தெருவிளக்குகள் அமைக்கப்படுகின்றன.

எல்.இ.டி., பல்ப் பொருத்துவதன் மூலம், தெருவிளக்குகளுக்கு செலவாகும் மின்சாரத்தில், 35 சதவீதம் சேமிக்கப்படும்; பராமரிப்பு கட்டணத்தில் 15 சதவீதம் குறையும். இத்திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் ஜி.ஐ.எஸ்., தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். இதனால், எரியாத மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, 100 சதவீத தெருவிளக்குகள் எரிவது உறுதி செய்யப்படும்.தமிழகத்தில் முதன்முறையாக, திருப்பூர் மாநகராட்சியில் வரும் நவ., 1ல் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம், தெருவிளக்கு மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினத்தில் 50 சதவீதம் வரை குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும், மின் சேமிப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தற்போதைய அடிப்படை மின்சார செலவினம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாம் நிலை தனி வல்லுனர் குழு ஆய்வு செய்து, அனைத்து பணிகளும் முடிந்துள்ளன; வரும் 1ம் தேதி முதல், திட்ட பணிகள் துவங்கும்,'' என்றார்.

 

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டம்

Print PDF

தினமணி       24.09.2014

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில்  1,000 வீடுகள் கட்ட திட்டம்


புதுச்சேரியில் இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

 புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் இதுகுறித்து அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசியது:

 இயற்கை பேரிடர் நிதியாக ரூ.188 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை எந்த திட்டங்களுக்கு அரசு செலவு செய்யப் போகிறது?

 முதல்வர் ரங்கசாமி: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத வகையில் கூரை வீடுகளுக்கு பதிலாக சுமார் ஆயிரம் கல் வீடுகள் கட்டுதல், தீயணைப்புத் துறைக்காக வானுயர் ஏணி, அவசர உதவி வண்டி, அத்தியாவசிய தீயணைப்புக் கருவிகள் வாங்குதல், வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்திலிருந்து கரையோர நகரப் பகுதிகளில் உள்ள குறைந்த மின் அழுத்த பாதைகள் மற்றும் நுகர்வோரின் மின் இணைப்புகளை புதைவடமாக மாற்றுதல், புதுவை மின் துறையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைத்தல், நோணாங்குப்பம், அரியா ங்குப்பம், தவளகுப்பம் பழைய பாலங்களை புதுப்பித்தல், வைத்திக்குப்பம் சிறுபாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், அதே பகுதியில் சோலை நகரில் உள்ள சிறு பாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், புதுவை மீன்பிடி துறைமுகத்தில் படகு சறுக்குப்பாதை, படகு நிறுத்தும் தளம், படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை, படகு விசை இழுவை அறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கடற்கரை குபேர் சாலை நகராட்சி கட்டடம் புதுப்பித்தல், பழைய மீன் அங்காடிகளை மேம்படுத்துதல், காரைக்காலில் நவீன சுகாதார மீன் அங்காடி, மீன்பிடி துறைமுகத்தில் சறுக்குப் பாதை, படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை கட்டுதல், நேரு அங்காடியை புதுப்பித்தல், மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளன என்றார்.
 உறுப்பினர்கள் நாஜிம், லட்சுமிநாராயணன், அன்பழகன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள், மாஹே, ஏனாமுக்கு இந்த நிதியில் திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தற்போதைய திட்டங்களை மாற்றியமைத்து பிற தொகுதிகளிலும் திட்டங்களை கொண்டு வரலாம்.

 இதுகுறித்து உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

Print PDF
தினமணி       17.09.2014

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

திருநெல்வேலி மாநகராட்சி கையகப்படுத்திய மாட்டுச்சந்தை மூலம் ஒரு நாள் வசூலாக ரூ.1.16 லட்சம் கிடைத்துள்ளது.

மேலப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தையின் கட்டணம் வசூலிக்கும் உரிமை தொடர்பாக தனியார் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து, கட்டண உரிமையை மாநகராட்சி ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், சந்தையை மாநகராட்சி கையகப்படுத்தக் கோரி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், உடனடியாக சந்தையை கடந்த 12ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மூலம் சந்தையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையிலான ஒரு நாளில் மட்டும் கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.11 லட்சம் கிடைத்தது. 1,544 மாடுகள், 1,600 ஆடுகள், 146 கோழிகள் மற்றும் அவற்றை ஏற்றி வந்த வாகனங்கள் மூலம் இந்தக் கட்டண வசூல் கிடைத்துள்ளது.
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 37