தினகரன் 27.08.2012
மேலப்பாளையம் மண்டலத்தில் அறிமுகம் துப்புரவு பணியை தனியாரிடம் விட மாநகராட்சி முடிவு ஆண்டுக்கு ரூ.136.85 லட்சம் மிச்சம்
நெல்லை, : துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு ரூ.136.85 லட்சம் மிச்சமாகிறது.
108 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ள நெல்லை மாநகராட்சியின் மக்கள்தொகை 4.78 லட்சமாகும். மாநகரில் மட்டும் 1.25 லட்சம் வீடுகளும், 6,928 வணிக நிறுவனங்களும், 2 பஸ் நிலையங்களும், 2 தினசரி சந்தைகளும் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் அன்றாடம் உருவாகும் 154.42 மெட்ரிக் டன் குப்பைகளை அள்ளவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் முன்பு 881 துப்புரவு பணியாளர்கள் இருந்தனர்.
தற்போது மாநகராட்சியில் 520 பேர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 335 சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தினக்கூலி கேட்டு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால், பணிகள் பாதிக்கப்படுவதோடு, பொது சுகாதாரமும் கேள்விக்குறி யாகிறது. பணியாளர் பற்றாக் குறையால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்த முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.
எனவே மாந கராட்சியில் உள்ள 4 மண்ட லங்களில், ஒன்றில் மட்டும் குப்பைகள் அள்ளும் பணியை தனியாரிடம் ஒப் படைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்காக நெல்லை மாநகராட்சி அதிகாரி கள் மேலப்பாளையம் மண்ட லத்தை தேர்வு செய்துள்ளனர்.
தனியார் நிறுவனம் மூலம் குப்பைகளை சேகரித்து அகற்ற ஆகும் செலவு உத்தேசமாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.1275 என கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலம் குப்பைகளை சேகரிக்க ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2072 செலவாகிறது.
எனவே திடக்கழிவு மேலாண்மை பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதால் மாநக ராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.136.85 லட்சம் மிச்சமாகிறது. நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி பெற்று மேலப்பாளையம் மண்ட லத்தில் குப்பைகள் அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.245 பணியாளர்கள்பிற மண்டலங்களுக்கு மாற்றம்மேலப்பாளையம் மண்டலம் 40 கி.மீ நெடுஞ்சாலை மற்றும் 211 கி.மீ மாநகராட்சி சாலைகளை உள்ளடக்கியதாகும். இம்மண்டலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 47 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. இப்பணியினை தற்போது 110 நிரந்தர பணியாளர்கள், 135 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் அள்ளும் பணி அறிமுகப்படுத்தப்படும்போது, இங்குள்ள 245 துப்புரவு பணியாளர்கள் பிற மண்டலங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.