Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

Print PDF

தினத்தந்தி            13.12.2013

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

சொத்து வரி, தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, மற்றும் குடிநீர் கட்டணம், அபாயகரமான பொருட்களை பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி கட்டணம், மற்றும் மாநகராட்சி வணிக வளாக வாடகை, காலியிட வரி, வீடுகள் கட்டுவதற்கான வரைபட அனுமதி ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, வீடு கட்டுவதற்கான திட்டவரைவு அனுமதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தவும், ஆன்லைன் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் பட்டியலும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

ரூ.157 கோடி

இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வரி வருவாய் உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மொத்தம் ரூ.157 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24.15 சதவீதம் அளவுக்கும், மே மாதம் 30.07 சதவீதம் அளவுக்கும், ஜூலை மாதம் 21.28 சதவீதம் அளவுக்கும், ஆகஸ்டு மாதம் 59.43 சதவீதம் அளவுக்கும், செப்டம்பர் மாதம் 32.32 சதவீதம் அளவுக்கும், அக்டோபர் மாதம் 55.64 சதவீதம் அளவுக்கும், நவம்பர் மாதம் 32.68 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையும் அதிகரிப்பு

தொழில் வரி, சொத்துவரி உயர்ந்துள்ளதுடன், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதன் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் சொத்துவரி செலுத்தும் பட்டியலுடன் புதிதாக இணைக்கப்பட்டது. இதன்படி கடந்த 2012-13-ம் ஆண்டில் சொத்துவரி செலுத்தும் பட்டியல் 23,510 அளவுக்கு புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் 18 ஆயிரத்து 391 எண்ணிக்கை சொத்துவரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சொத்து வரி வருமானம் ரூ.11 கோடியே 77 லட்சம் உயர்ந்துள்ளது.

உடனடியாக செலுத்தும் வசதி

காலியிட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 4,994 அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மற்றும் பிற அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துபேசி தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி வரி வருவாய் உயர்ந்து இருப்பதன் காரணமாக, மாநகராட்சிக்கு கடன் உதவி அளிக்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகராட்சியின் திரும்ப செலுத்தும் வசதி அதிகரித்து இருப்பதன் மூலம் திட்ட மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சேலம் தனி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் செலவு ரூ37.45 கோடி அரசு மானியமாக ஒதுக்கீடு

Print PDF

தினகரன்          07.08.2013

சேலம் தனி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் செலவு ரூ37.45 கோடி அரசு மானியமாக ஒதுக்கீடு

சேலம் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டத்திற்கான கூடுதல் செலவின தொகை ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

சேலம் மாநகராட்சி மக்களுக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் 5, 7 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் குழாயில் அடிக்கடி கசிவு ஏற்படுவதால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 2009ம் ஆண்டு சேலம் மாநகராட்சிக்கு என தனி குடிநீர் திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக அப்போது ரூ283.09 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் பணிகள் துவங்கப்பட்டு, மேட்டூரில் இருந்து சேலம் வரை பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஓமலூர் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி மட்டும் நிறைவடையாமல் உள்ளது. அந்த இடத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கும்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு, தனி குடிநீர் திட்ட செயலாக்கத்திற்கு திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதில், கூடுதலாக ரூ37.45 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டு, ரூ320.54 கோடிக்கு நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இதையடுத்து கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசே முழு மானியமாக வழங்கிட வேண்டும் என சேலம் மாநகராட்சி நிர்வாகம் கோரியது.

இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி தனி குடிநீர் திட்ட கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்குகிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தனி குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், இத்திட்டத்திற்கான கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட முதல் நிலை பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநகர பகுதியில் நடக்கும் விநியோக குழாய் மற்றும் பிரதான குழாய் பதிப்பு, 22 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் இரண்டாம் நிலை பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து, மாநகருக்கு குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,‘‘ என்றனர்.

 

ரூ.45 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணி

Print PDF

தினமணி               01.07.2013

ரூ.45 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணி

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.45 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் நிதியின்கீழ், குடிநீர் அபிவிருத்திப் பணிகளை ரூ.10.85 கோடி மதிப்பில் மேற்கொள்ள திருப்பூர் மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிதியுடன் மாநகராட்சி நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.12.21 கோடி மதிப்பில் முதலாவது மண்டலத்தில் குடிநீர் அபிவிருத்திப் பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இதில், மூகாம்பிகை காலனியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 10 லிட்டர்  கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, அதே பகுதியில் ரூ.69 லட்சம் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி, ரூ.74 லட்சம் செலவில் பகிர்மானக் குழாய்கள் உள்பட பல்வேறு குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்காக மொத்தம் ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2,3, 4-வது மண்டலங்களில் மொத்தம் ரூ.32.78 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்காக திட்ட மதிப்பீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு நகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


Page 3 of 37