தினமலர் 29.11.2013
தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் திட்டம் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது மாநகராட்சி
சென்னை:திருவனந்தபுரம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டதை போன்று, தனியார் பங்களிப்புடன் புதிய சாலை அமைக்கும் பணிகளை செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆய்வு பணிகளை துவக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் தனியார் பங்களிப்புடன் திருவனந்தபுரம் மாநகராட்சியில் நகர சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதை முன்மாதிரியாக கொண்டு, சென்னை மாநகராட்சியிலும் சாலைகளை தனியார் பங்களிப்புடன் உருவாக்க முடியுமா என, ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
அதை அடிப்படையாக கொண்டு, சென்னை மாநகராட்சியில் தனியார் பங்களிப்புடன் சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், இதற்கான சாத்தியகூறுகள் குறித்து முதலில் ஆய்வு செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரிவாக்க பகுதிகளில் இன்னும் புதிய சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் கொண்ட பல பிரதான சாலைகளும் மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த தனியார் பங்களிப்பு திட்டத்தை விரிவாக்க பகுதிகளில் செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
இதற்காக விரிவாக்க பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டிய புதிய சாலைகள் குறித்த பட்டியலை மாநகராட்சி தயாரித்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு, இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.
இதற்கு நிதி முதலீடு செய்யும் தனியாருக்கு என்னென்ன ஆதாயங்கள் வழங்கப்படுகின்றன என தெரியவில்லை. அதை பொறுத்து சென்னையில் இந்த திட்டம் சாத்தியமா என, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.