தினத்தந்தி 04.10.2013
சேலம் அம்மாபேட்டை பகுதிகளில் ரூ.2½ கோடி மதிப்பில் பிளாஸ்டிக் தார்சாலைகள் பணிகளை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்
சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி வாசகசாலை 3–வது குறுக்குத்தெருவில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் நடேசன் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறுகையில், ‘சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் தார் சாலைகள் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் பெய்த மழையின் போது பழதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கவும், பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கவும், கழிவுநீர் பாதை அமைக்கவும், சிறிய பாலங்கள் அமைக்கவும் தமிழக அரசு ரூ.21 கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்‘ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் செயற்பொறியாளர் காமராஜ், உதவி ஆணையாளர் புஷ்பலதா, உதவி செயற்பொறியாளர் எம்.ஆர்.சிபிசக்ரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.