Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

Print PDF
தினமணி               06.01.2014

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 92 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 4 மாநகராட்சி பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பெற்ற பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாநகராட்சி கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், "எவரெஸ்ட் எடுசிஸ் சொல்யூஷன்' நிறுவனத்தின் துணைத்தலைவர் உமா மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகளுக்கென பிரத்யேக செய்தி மடல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- மாநகராட்சி பள்ளிகளின் நடவடிக்கைகள், சாதனைகள், புதிய முயற்சிகள் ஆகியவை செய்தி மடலில் இடம்பெற்றிருக்கும். மாதம் இரு முறை 4 பக்கங்களாக செய்தி மடல் வெளியிடப்பட உள்ளது.

இது மாநகராட்சி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விநியோகிக்கப்படும். சுமார் 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பிறகு செய்தி மடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்

"தேசிய அறிவியல் தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக சிங்கப்பூர் இலவச பயணம், இரண்டாம் பரிசாக இந்தியாவில் உள்ள ஏதேனும் அறிவியல் மையத்துக்கு இலவச பயணம், மூன்றாம் பரிசாக லேப்டாப் அல்லது ஐ-பேட் வழங்கப்பட உள்ளது. விரைவில் இந்த போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6 பள்ளிகளில் அறிவியல் மையங்கள்

திருவொற்றியூர், கும்மாளம்மன் கோயில், வியாசர்பாடி, மடுமாநகர், ஏ.பி.சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்குள் அறிவியல் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

எடப்பாடியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள்

Print PDF

தினமணி                 03.01.2014

எடப்பாடியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள்

எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடைகளை நகராட்சித் தலைவர் டி.கதிரேசன் வழங்கினார்.

எடப்பாடி பகுதியில் உள்ள 74 தொடக்க,  நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6,710 மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் தலைவர் டி.கதிரேசன் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகம், சீருடைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அன்பழகன், செங்குட்டுவேல், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

Print PDF

தினமலர்              11.12.2013

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

 படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்'  மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

கோவை :கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியும், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷனும் (ஏ.ஐ.எப்.,) இணைந்து, மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, "டேப்லெட் கம்ப்யூட்டர்' வழங்கி, ஆசிரியர்கள் "சைகை' மொழியில் கல்வி போதிப்பதை, கையடக்க "டேப்லெட் கம்ப்யூட்டரில்' வழங்கியுள்ளது.

அதேபோன்று மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், கல்வி கற்கும் முறையை எளிமைப்படுத்த "ஏ.ஐ.எப்' திட்டமிட்டது. வகுப்பறையில் கரும்பலகையில் எழுதி, கல்வி போதிக்கும் நிலையை மாற்றி, மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை புரிய வைக்க "ஸ்மார்ட் கிளாஸ்' முறையை அறிமுகம் செய்துள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பாடங்களை, ஆசிரியர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்துவதை பதிவு செய்து, தேவையான படங்களை இணையதளத்தில் தேடி பிடித்து, எடிட்டிங் செய்து, கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்' பாடங்களை மாணவர்களிடம் முன்கூட்டியே ஒப்படைத்து, கற்பிக்கின்றனர். அதன்பின், வழக்கம் போல், ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது, பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று, தெளிவுபடுத்திக் கொள்கின்றனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்'க்கு பிறகு, மாணவர்கள் குழு விவாதம் செய்கின்றனர். இறுதியாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மிகவும் எளிதாக கல்வி கற்கின்றனர்.

ஏ.ஐ.எப்., மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறுகையில், ""மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பாடங்களை "ஸ்மார்ட் கிளாஸ்' முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது, அனுப்பர்பாளையம், குப்பக்கோணாம்புதூர், மணியகாரம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் "பைலட்' திட்டமாக "ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கியுள்ளோம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியலில் தலா இரண்டு பாடங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஸ்மார்ட் கிளாஸ்' மூலமும், சாதாரண வகுப்புகள் மூலமும் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித்திறன் சோதிக்கப்படுகிறது. அடுத்த பருவத்தில், மாநகராட்சியில் உள்ள 26 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' துவக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் சுய கற்றல், குழு விவாதம், பாடம் சார்ந்த அறிவு மேம்படும்'' என்றார்.

எளிதானது கற்றல், கற்பித்தல்!

கோவை அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மகேந்திரகுமார் கூறுகையில், ""பாடப்புத்தகத்தை பார்த்து, கரும்பலகையில் எழுதி பாடம் நடத்தும்போது, மாணவர்கள் அதை எழுதி வைத்து படிக்கின்றனர். இந்த முறையில் கம்ப்யூட்டர் மூலம், செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்தும் போது, மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக உள்ளது'' என்றார்.

  • தமிழ் ஆசிரியர் ஜாய் விமலா கூறுகையில், ""தமிழ் இலக்கணப்பகுதியை எத்தனை முறை கற்றுக்கொடுத்தாலும் மாணவர்கள் சிரமமாக கருதுகின்றனர். "ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் இலக்கணம் படிக்கும்போது, எளிதாக புரிந்து கொள்கின்றனர். சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ பார்த்து தெளிவுபடுத்தி கொள்கின்றனர்'' என்றார்.
  • 7ம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கூறுகையில், ""பள்ளிக்கு விடுப்பு எடுத்தாலும், அடுத்த நாள் வந்து கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த பாடத்தை கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் விடுப்பில் இருந்தாலும், பதிவு செய்து வைத்துள்ள பாடங்களை படித்துக்கொள்ளலாம். இந்த முறையில் கல்வி கற்க ஆர்வமாகவும், எளிதாகவும் உள்ளது'' என்றார். 
Last Updated on Wednesday, 11 December 2013 07:33
 


Page 5 of 111