Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

வேலூர், தி.மலை மாவட்டத்தில் 25 பேரூராட்சிகளில் கணினி வரி வசூல் மையம் நவம்பருக்குள் திறக்க நடவடிக்கை

Print PDF

தினகரன்            08.08.2013

வேலூர், தி.மலை மாவட்டத்தில் 25 பேரூராட்சிகளில் கணினி வரி வசூல் மையம் நவம்பருக்குள் திறக்க நடவடிக்கை

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 25 பேரூராட்சிகளில் கணினி வரிவசூல் மையம் வரும் நவம்பர் மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், சோளிங்கர், விளாப்பாக்கம், திமிரி, கலவை, திருவலம், அம்மூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட 16 பேரூராட்சிகள் உள்ளன.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், புதுப்பாளையம், கண்ணமங்கலம், களம்பூர், தேசூர், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் உள்ளன.

மொத்தமுள்ள 26 பேரூராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, பேரூராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிட வரி உள்ளிட்டவை நிதி ஆண்டின் இறுதியில் மொத்தமாக வசூல் செய்து முடிக்கப்படும். இவ்வாறு முடிக்கப்படும் வரி வருவாய் குறித்த விவரங்களை பேரூராட்சி பதிவேட்டில் பராமரிப்பதில் சிரமங்கள் மற்றும் தவறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக அனைத்து பேரூராட்சிகளிலும் கணினி வரிவசூல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சியில் கணினி வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், செங்கம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வரி மட்டும் இந்த மையத்தில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வரிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேலூர் மாவட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கணினி வரி வசூல் மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 24 பேரூராட்சிகளில் விரைவில் கணினி வரி வசூல் மையம் திறப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கான ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்துவருகிறது.

இதுகுறித்து, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி கூறுகையில், Ôஅனைத்து பேரூராட்சிகளில் நவீன கணினி வரி வசூல் மையம் வரும் நவம்பர் மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒரு கணினி வரி வசூல் மையம் செயல்படும். இங்கு, பயிற்சி பெற்ற ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவார்Õ என தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 529 பேரூராட்சிகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 81 லட்சத்து 11 ஆயிரத்து 258 பேர் வசிக்கின்றனர். இது தமிழக மக்கள் தொகையில் 11.24 சதவீதம்.  

 

கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் திட்டம் மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி              03.08.2013

கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் திட்டம் மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியில் 7 நாட்களுக்குள் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி அளிக்கும் வகையில், பசுமை வழி முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் முறையை மேயர் சைதை துரைசாமி நே தொடங்கி வைத்தார்.

ஆன்–லைன் முறை

முன்பெல்லாம் சென்னை மாநகராட்சியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு மாநகர அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்த பின்னர் நேரடியாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் அதிக காலதாமதம் ஏற்பட்டதுடன் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

எனவே இந்த முறையை மாற்றி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடந்த ஜூலை 1–ந்தேதி ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒரு மாத காலத்திற்குள் வரைபட ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது.

பசுமை வழிமுறை

இந்நிலையில் ஒப்புதல் வழங்கும் காலத்தை மேலும் குறைக்கும் வகையில் பசுமை வழி முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் முறையை மேயர் சைதை துரைசாமி நேற்று ரிப்பன் கட்டிடத்தில் தொடங்கி வைத்தார். இம்முறையில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் கள ஆய்வு செய்யாமல் ஒப்புதல் வழங்கப்படும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலம், நிலத்தடி நீர்பிடிப்பு பகுதி, ரெயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டருக்குள்ளோ, மெட்ரோ ரெயில் பாதையில் இருந்து 50 மீட்டருக்குள்ளோ இருக்கும் மனைகளுக்கு இம்முறையில் விண்ணப்பிக்க இயலாது. மேலும் இரண்டாம் முழுமைத்திட்டத்தின்படி சாலையினை விரிவாக்கம் செய்யப்பட வேண்டி நிலம் அளிக்க வேண்டி இருந்தால், இம்முறையில் விண்ணப்பிக்க இயலாது.

மக்களிடையே வரவேற்பு

பசுமை வழி முறையில் விண்ணப்பிக்கப்படும் மனை காலியாகவோ அல்லது தகர்ப்பு ஒப்புதல் வழங்கிய பிறகு காலி மனையாகவோ இருக்க வேண்டும். மனை அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அல்லது மனை உட்பிரிவில் இருக்க வேண்டும். இந்த புதிய திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

திருப்பூர் மாநகராட்சியில் "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை

Print PDF

தினமலர்              01.08.2013

திருப்பூர் மாநகராட்சியில் "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களின் வருகை பதிவுகளை, கம்ப்யூட்டர் மூலமாக கண்காணிக்கும் வகையில், "பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைவருக்கும், வருகை பதிவேடு, நோட்டு புத்தகங்களில் பராமரிக்கப்படுகிறது.

முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும், "பயோமெட்ரிக்' வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாநகராட்சியில், இன்று (1ம் தேதி) முதல் "பயோமெட்ரிக்' வருகை பதிவு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு,"பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலகத்தில், அலுவலர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்ததாக, மண்டல அலுவலர்களுக்கும், சுகாதார பிரிவுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கைவிரல் ரேகையை பதிவு செய்வதுடன், ஒவ்வொருவரின் முகத்தையும் அங்குள்ள கேமரா முன்பாக காட்ட வேண்டும். இத்திட்டம், ஒரு மாதம் சோதனை அடிப்படையில் செயலாக்கப்படும். அதன்பின், கம்ப்யூட்டர் மூலமாக கண்காணிக்கும், "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.

 


Page 8 of 41