Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

சென்னை மாநகராட்சி நடத்தும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா

Print PDF

மாலை மலர்                 24.07.2013

சென்னை மாநகராட்சி நடத்தும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
 

ஏழை, எளியவர்கள், கூலி வேலை செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் அம்மா உணவகம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம், கருவேப்பிலை சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. காலை மற்றும் மதியம் இரண்டு வேளைக்காக செலவிடப்படும் சாப்பாட்டு செலவு இதனால் குறைவதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் 7 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகத்தை திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பதற்காக அனைத்து ஏற்பாடும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான கட்டிடம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொது ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு மற்ற இடங்களை விட சமையல் அறை, சாப்பிடும் இடம் போன்றவை மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. புதிய உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு தினமும் 10 ஆயிரம் இட்லி 5 ஆயிரம் சாதம் வகைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைகள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரி, வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

தற்போது நடந்து வரும் 200 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க கேமரா பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உணவு தயாரித்தல், பரிமாறுதல், ஊழியர்கள், பொது மக்களிடம் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை மாநகராட்சியில் இருந்தவாறு கண்காணிக்க இருக்கிறார்கள்.

இதற்காக 200 நவீன கேமிராக்கள் வாங்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அம்மா உணவகங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தூய்மைப் பணியிலும் உயர் தொழில்நுட்பம் கழிப்பிடம் பராமரிக்க, "ஸ்மார்ட் போன்'

Print PDF

தினமலர்              12.07.2013

தூய்மைப் பணியிலும் உயர் தொழில்நுட்பம் கழிப்பிடம் பராமரிக்க, "ஸ்மார்ட் போன்'

கோவை:கோவை மாநகராட்சியில் பொதுக் கழிப்பிடங்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு "ஸ்மார்ட் போன்' வழங்கப்பட்டது.

மாநகராட்சியிலுள்ள பொதுக்கழிப்பிடங்களில் ஆள் நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எந்த கழிப்பிடத்திலும் முறையான பராமரிப்பு இல்லை; தண்ணீர், மின் வசதி எதுவும் இல்லை. பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடங்கள், வார்டுகளில் உள்ள பொதுக்கழிப் பிடங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

பொதுக் கழிப்பிடங்களை துப்புரவு மேற்பார்வையாளர்கள் கண்காணித்து, அதிகாரிகளுக்கு தெரிவித்து, அதன்பின் நடவடிக்கை எடுக்கும் போது காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுக்கழிப்பிடங்களில் நிலவும் குறைபாடுகளை உடனுடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க "ஸ்மார்ட் போன்' தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு
"ஸ்மார்ட் போன்' வழங்கப்பட்டது.

மேயர் பேசுகையில், "பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வினியோகம், சுகாதாரம், மின் சப்ளை, கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகள் தொடர்பாக, ஏற்கனவே திட்டமிட்ட இரு கேள்விகள் ஸ்மார்ட் போனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கழிப்பிடத்தை ஆய்வு செய்ததும், பதிலை பதிவு செய்ய வேண்டும். தினமும் இருவேளை கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும். ஸ்மார்ட் போன் தகவல்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பெறப்படும். இத்தகவலின் அடிப்படையில் பொதுக்கழிப்பிடங்களில் உடனடியாக தூய்மைப்பணி மேற்கொள்ள, உரிய அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்படும்' என்றார்.

கமிஷனர் லதா பேசுகையில், "கோவை மாநகராட்சியில் 275 பொதுக்கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களும், துப்புரவு மேற்பார்வையாளர்களும் ஐந்து பொதுக்கழிப் பிடங்களை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சிவராசு, துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழுத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை இணையதளத்தில் தினமும் வெளியீடு

Print PDF

தினமணி              10.07.2013

துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை இணையதளத்தில் தினமும் வெளியீடு

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் பணியாற்றும் துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் இணையதளத்தில் நாள்தோறும் வெளியிடப்படவுள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தெருக்களுக்குச் செல்வதில்லை என்று மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்ததையடுத்து, பயோ மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை விவரத்தை இணையதளத்தில் வெளியிட தெற்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

வருகைப் பதிவு தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மத்திய மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் சோதனை அடிப்படையில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தெற்கு மாநகராட்சிக்கு உள்பட்ட நஜஃப்கர், தெற்கு, மேற்கு மண்டலங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மணீஷ் குப்தா செவ்வாய்க்கிழமை கூறியது:

தெற்கு மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் தெருவுக்கோ, பகுதிக்கோ பணியாற்றவரும் தொழிலாளர் யார்? எத்தனை மணிக்கு அவர் பணிக்கு வந்துள்ளார் போன்ற விவரத்தை குடியிருப்புவாசிகளால் அறிந்து கொள்ள முடியும்.

வருகைப் பதிவு செய்த தொழிலாளர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் உடனே அப்பகுதிவாசிகள் மாநகராட்சிஅலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளின் வருகையை "பயோ-மெட்ரிக்' முறையில் பதிவு செய்யும் வழக்கம் 2008-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

 


Page 10 of 41