தினகரன் 10.08.2012
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பள்ளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் 40 கம்ப்யூட்டர் வாங்க முடிவு
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயன்பாட்டிற்காக 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 40 கம்ப்யூட்டர்கள் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ஈரோடு மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்டு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 15 வார்டுகள் ஒரு மண்டல பகுதியாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள அலுவலகங்களில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையத்தில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகிறார்கள். இந்த மையங்களில் ஏற்கனவே பழைய மாடல் கம்ப்யூட்டர்கள் பயன் பாட்டில் உள்ளது. இதனால் வேகத்திறன் குறைந்து பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏறபட்டு வருகிறது. இதனால் 4 மண்டல அலுவலகங்கள் மற்றும் வரிவசூல் மையங்களில் பயன்பாட்டிற்காக புதிதாக கம்ப்யூட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக 20 கம்ப்யூட்டர்கள் வாங்கப்படவுள்ளது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி ரோடு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் பிரிவில் 11ம்வகு ப்பில் 144 மாணவிகளும், 12ம்வகுப்பில் 94 மாணவிகளும் என 238 பேர் படித்து வருகிறார்கள். தறபோது இந்த பள்ளியில் 9 கம்ப்யூட்டர்கள் மட்டுமே உள்ளதால் பற்றாக்குறை உள்ளது. இதற்காக இந்த பள்ளிக்கு 20 கம்ப்யூட்டர்களும் வாங்கப்படவுள்ளது. மண்டல அலுவலகங்கள், பள்ளிகளின் பயன்பாட்டிற்காக 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 40 கம்ப்யூட்டர்கள் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதில் பள்ளிகளுக்கு வாங்கும் கம்ப்யூட்டர்களுக்கு கல்வி நிதி மூலமாகவும், மாநகராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கம்ப்யூட்டர்கள் பொது நிதியில் இருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் இதற்காக டெண்டர் விடப்பட்டு கம்ப்யூட்டர்கள் வாங்கப்படவுள்ளது.