தினமலர் 05.01.2010
ஒப்பந்த துப்புரவு பணியாளருக்கு கைரேகை வருகைப்பதிவு முறை
கோவை : கோவை மாநகராட்சி வார்டுகளில், துப்புரவு பணி மேற்கொள்ள பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 416 துப்புரவு பணியாளர்களையும், 19 மேற்பார்வையாளர்களையும் மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. 20 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளரோடு இணைந்து பணிமேற்கொள்வர்.
மேற்கு மண்டலத்தில் 130 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளரும், தெற்கு மண்டலத்திற்கு 70 பணியாளர்களும், நான்கு மேற்பார்வையளாரும் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனர். இன்று பணிகளை துவக் கினர்.
கிழக்கு மண்டலத்திற்கு 88 பணியாளர்களும், ஐந்து மேற்பார்வையாளரும், வடக்கு மண்டலத்திற்கு 128 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளர்களும் நேற்று நியமிக்கப்பட்டனர். இவர்கள் புதன்கிழமை முதல் பணி மேற்கொள்வர்.
ஒவ்வொருவரும் வார்டு அலுவலகத்தில் வருகையை உறுதி செய்து கொள்ள, வருகைப் பதிவு இயந்திரத்தில், கைரேகையை பதிவு செய்ய வேண்டும்; நேரம் தவறும்பட்சத்தில் சம்பளத்தொகையில் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஒவ்வொரு துப்புரவு பணியாளருக்கும் மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் ஒப்பந்த நியமன உத்தரவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் வழங்கினர்.