Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்

Print PDF

மாலைச்சுடர்              02.01.2014

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்
.
கோடநாடு, ஜன.2:  முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
.
மேலும், 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்து, 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அவர்களுக்கு நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தும் விதத்தில், பொது சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதிலும்  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் 7.35 ஏக்கர் நிலப்பரப்பில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த   பேருந்து நிலையத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் வைப்பறை, நவீன கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 முதலமைச்சர் ஜெயலலிதா 15.1.2013 அன்று தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம்   திறப்பு  விழாவில், தேனிஅல்லிநகரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக்  அவர்களின் நினைவை போற்றும் வகையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி நகராட்சியில்  3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை, செங்கம்-புதுப்பாளையம்  ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு  1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; நாகப்பட்டினம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த  14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;  6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை, திருவத்திப்புரம் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, பத்மநாபபுரம்  நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்,17 மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 அலுவலகக் கட்டடங்கள்;

11 மாவட்டங்களில் உள்ள 34 பேரூராட்சிகளில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 சுகாதார வளாக கட்டடங்கள்; திருவாரூர், நன்னிலம் பேரூராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடம்; காவேரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்; 4 மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நவீன இறைச்சி கூடங்கள்; தேனி, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை  முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும்,  சேலம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்  2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும்  கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்  கட்டப்படவுள்ள  புதிய அலுவலகக் கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம்,  புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேருந்து நிலையம்;   விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி நகராட்சியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் என 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 09 January 2014 11:03
 

தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

தேனியில் திங்கள்கிழமை கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

     தேனியில், தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ தொழிற்பேட்டை பின்புறம், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.15.25 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவாக, அவரது பெயரை தேனி புதிய பஸ் நிலையத்துக்கு சூட்டுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

   புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை பகல் 12.05 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தேனியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பங்கேற்று பேசினார். தேனி நகர் மன்றத் தலைவர் எஸ். முருகேசன், துணைத் தலைவர் வி. காசிமாயன், ஆணையர் எஸ். ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிதம்பரம் நன்றி கூறினார்.

புதிய பஸ் நிலைய திறப்பு விழாவை அடுத்து, தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், கோவை உள்ளிட்ட 6 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

 

தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

Print PDF

தினமணி              30.12.2013

தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கர்னல்.ஜான் பென்னிகுயிக் நினைவு புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை (டிச.30) காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். 

 தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை வால்கரடு பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 7.35 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2010, டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள், கடந்த 2011-ம் ஆண்டு ரூ.15.25 கோடியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல்.ஜான் பென்னிகுயிக் பெயரை சூட்டுவதாக கடந்த 2013, ஜன.15-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

  ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்றுள்ள தேனி புதிய பஸ் நிலையத்தில் 59 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலைய வளாகத்துக்குள் 3 இடங்களில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், 2 உணவகங்கள், 67 கடைகள், 6 கட்டண கழிப்பறை, 2 இலவச கழிப்பறை, டிக்கெட் முன்பதிவு அறைகள், புறக்காவல் நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம், ஓட்டுநர் ஓய்வறை, பூங்கா, செயற்கை நீரூற்று உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வனத்துறைக்கு குத்தகை: புதிய பஸ் நிலைய இடத்துக்கு நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 220 வீதம், 20 ஆண்டுகளுக்கு வனத்துறைக்கு குத்தகை தொகை செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

பஸ் நிலைய வளாக கடைகள், உணவகம், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலம் நகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.2.25 கோடிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை(டிச.30) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். திறப்பு விழா ஏற்பாடுகளை சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேனி நகர்மன்றத் தலைவர் எஸ்.முருகேசன், துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டனர். 

 


Page 2 of 57