தினமணி 29.10.2010
கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம், அக். 28:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலையத்தில் 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைக்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா சக்கரபாணி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் எம்.பி.மூர்த்தி வரவேற்றார்.
இந்த விழாவில் வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.பெரியசாமி உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்து பேசியதாவது:பழனியில் இருந்து சென்னைக்கு விரைவில் ரயில் இயக்கப்படும். திண்டுக்கல்-பழனி இடையே மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் 381 பேருக்கு 21 லட்சத்து 14 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், பழனி கோட்டாட்சியர் நாராயணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் விசுவநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராமதிலகம், ஒட்டன்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.